tamilnadu

img

அரசாணைப்படி ஊதியம் கேட்டு துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

செப்.7  ரிப்பன் மாளிகை முற்றுகை: எஸ்.கே.மகேந்திரன்

சென்னை, ஆக. 21 - சென்னை மாநகராட்சியில் மதிப்பூதியம், தொகுப்பூதியம், ஒப்பந்தம், தினகூலி என பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அரசாணைப்படி ஊதியம் வழங்க கோரி வெள்ளியன்று (ஆக.21) ஆலந்தூர் மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர். பெண் தொழிலாளர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வரும் 167வது வட்ட துப்புரவு ஆய்வாளர் பி.டி.முரளிதரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பணி உபகரணங்களை வழங்க வேண்டும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களுக்கு அரசு அறிவித்த இழப்பீடு, சிறப்பு ஊதியங்களை வழங்க வேண்டும், அனைத்து வட்டங்களிலும் உடைமாற்றும் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலந்தூர் மண்டல அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தின் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், பாலியல் சீண்டலில் ஈடுபடும் ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி புகார் அளித்த பெண் பெண் துப்புரவு பணியாளரை நிர்வாகம் பணியிட மாற்றம் செய்துள்ளது. இதனை ஏற்க முடியாது. துப்புரவு ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தூய்மை பணியாளர்களுக்கு தினசரி முகக்கவசமும், மாதம் இரண்டு கையுறைகளை வழங்க வேண்டும், தண்ணீர் மற்றும் கழிப்பிட வசதிகளை ஏற்படுத்த வேண்டும். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட நிரந்தரப் பணியாளர்களுக்கு வழங்கியது போன்று அனைத்து தொழிலாளர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 2017ம் ஆண்டு செப்டம்பர் 16ந் தேதி வெளியிடப்பட்ட அரசாணை(எண்62)ப்படி தூய்மைப் பணியாளரகளுக்கு தினக்கூலியாக 624 ரூபாய் கொடுக்க வேண்டும். கடந்த 3 ஆண்டுகளாக கொடுக்காமல் உள்ளதை கணக்கிட்டு வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை தமிழக அரசும், மாநகராட்சியும் நிறைவேற்றாவிடில் செப்.7ந் தேதி ரிப்பன் மாளிகையை முற்றுகையிடுவோம் என்றும் மகேந்திரன் கூறினார். இந்தப்போராட்டத்தில் சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் மணிமேகலை, சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.சீனிவாசுலு, துணைப்பொதுச் செயலாளர்கள் முனுசாமி, ராஜன், துணைத்தலைவர் என்.கிருஷ்ணமூர்த்தி, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் சாந்தி உள்ளிட்டோர் பேசினர்.