tamilnadu

img

இந்திய குடியரசின் மிக உயரிய வழிகாட்டும் ஒளி விளக்காம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 69ம் ஆண்டு தினம்

இந்திய குடியரசின் மிக உயரிய வழிகாட்டும் ஒளி விளக்காம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 69ம் ஆண்டு தினம், முன்னெப்போதையும் விட மிகுந்த முக்கியத்துவத்துடன் நவம்பர் 26 செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்டது. ஒருபுறம் அரசியலமைப்புச் சட்டத்தின் அனைத்து மாண்புகளையும் மிகக்கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கிக் கொண்டே, மறுபுறம்  அரசியல் அமைப்புச் சட்டத்தின்படிதான் தங்களது அரசு நடக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி பேசிக்கொண்டிருந்த அந்தத் தருணத்தில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலை முன்பு கூடிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அரசியலமைப்புச் சட்டத்தை மேலும் மேலும் உயர்த்திப்பிடிக்க உறுதிமொழி ஏற்றனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.கே.ரங்கராஜன், மதிமுக தலைவர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

“மகாராஷ்டிராவில் நடந்த சம்பவம் இந்திய அரசியல் சட்டத்தை மோடி அரசு காலில் போட்டு மிதித்ததற்கு எடுத்துக்காட்டாகும். ஒரு புறம் இந்திய அரசியல் சட்டத்தை நாடாளுமன்றத்தில் புகழ்ந்து பேசும் பிரதமர் மோடி, மறுபுறத்தில் நமது அரசியல் அமைப்பு சட்டத்தை கொஞ்சம்கூட மதிக்காத மத்திய அரசை கண்டித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே எதிர்க் கட்சிகள் போராட்டம் நடத்தும் நிலையில்தான் நாடு உள்ளது. பாஜக நினைத்தால் எதுவும் செய்யலாம் என்ற நிலை உள்ளது. இதற்கு உதாரணம்தான் மகாராஷ்டிரா விவகாரம். எதிர்க் கட்சிகள் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றதால் நீதிமன்றம் காலக்கெடு விதித்தது. இல்லை என்றால் பாஜகவினர் குதிரை பேரம் நடத்தி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியை தக்கவைத்திருப்பார்கள். மகாராஷ்டிராவில் பாஜக நடந்து கொண்ட விதம் அரசியல் சட்டத்தையே கேவலப்படுத்திவிட்டது”

சிதம்பரத்தில் சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்த பேட்டியிலிருந்து