1635 - ‘மாறுபட்ட, புதிய, ஆபத்தான கருத்துகளை’ பரப்பியதாகக் குற்றம்சாட்டப்பட்டு, ரோஜர் வில்லியம்ஸ், மாசாசூசெட்ஸ் குடா குடியேற்றத்திலிருந்து வெளி யேற்றப்பட்டார். இவர் ஒரு ப்யூரிட்டன் மதகுரு. ப்யூரிட்டன் என்பது, 16,17ஆம் நூற்றாண்டுகாலத்தில் சீர்திருத்த (புராட்டஸ்ட்டண்ட்) திருச்சபையினரின் பெயர். இவர்கள் இங்கிலாந்தின் திருச்சபையினை, கத்தோலிக்க வழக்கங் களிலிருந்து ‘சுத்தம் செய்வதற்காக’ தோன்றியதால் அப்பெயர் ஏற்பட்டது. இங்கிலாந்தின் திருச்சபை சரிசெய்ய முடியாத அளவுக்கு ஊழல் மலிந்ததாக இருப்பதாகவும், அதனால் அதற்கு முற்றிலும் தொடர்பில்லாத திருச்சபையை உருவாக்க வேண்டுமென்றும், அரசும், திருச்சபையும் தனித்தனியாக இருக்க வேண்டும், அரசின் அதிகாரங்களில் திருச்சபையின் தலையீடு கூடாது என்றும் கருத்துடையவரான வில்லியம்ஸ், 1630இல் அமெரிக்காவுக்கு வந்து, அவரு டைய கருத்துகளுக்கு ஏற்புடையதாக இருந்த செலேம் திருச்சபையில் பணியாற்றினார். 1931இல் ப்ளைமவுத் திருச் சபைக்கு வந்தபோது, அதன்மீது இங்கிலாந்து திருச்சபைக்கு இருந்த ஆதிக்கத்தை அவர் விரும்பவில்லை. அமெரிக்கத் தொல்குடியினரிடம் நல்ல நட்புறவு கொண்டி ருந்த வில்லியம்ஸ், அவர்களுடைய நிலங்களை, அவர்களிட மிருந்து முறைப்படி வாங்காமல் கைப்பற்றுவதை ஏற்க வில்லை. அவ்வாறு தொல்குடியினரிடமிருந்து நிலத்தைக் கைப்பற்றுவதைக் கண்டித்தும், அவற்றுக்கான உத்தரவில் இந்த நிலப்பரப்பைக் கண்டுபிடித்த முதல் கிறித்தவ முடி யரசு என்று ஜேம்ஸ் அரசர் தெரிந்தே பொய் உரைத்திருப்ப தாகவும், 1632 டிசம்பரில் ஒரு நீண்ட சமய ஆய்வுக் கட்டுரையை அவர் எழுதினார். கிறித்தவ அரசர்கள் எவரும் ஆட்சி செய்யாத, கிறித்தவர்கள் வாழ்ந்து கொண்டிராத புதிய நிலப்பரப்புகளைக் கண்டுபிடித்தால், குடியேற்றத்தை உருவாக்கலாம் என்பதே அக்காலத்தில் ஐரோப்பிய அரசர்கள் அளிக்கும் உத்தரவாக இருந்தது என்பது, இத்தொடரில் 2018 அக்டோபர் 29இல் வால்ட்டர் ராலீ பற்றிய செய்தியில் இடம்பெற்றுள்ளது. அரசரைத் தாக்கி எழுதப்பட்ட, வில்லியம்சின் இந்தக் கட்டுரைக்காகவே மேற்குறிப்பிட்ட தீர்ப்பு வழங்கப்பட்டு, அவர் வெளியேற்றப்பட்டார். அங்கிருந்து வெளியேறிய வில்லியம்ஸ், ரோட் தீவுப் பகுதியில், தொல்குடியினரிடமிருந்து நிலம் வாங்கி, ப்ராவிடன்ஸ் தோட்டங்கள் என்ற குடியேற்றத்தை உருவாக்கினார். ரோட் தீவு என்று அழைக்கப்பட்டாலும் அது தீவு அல்ல. அப்பகுதிக்கு முதலில் வந்த போர்ச்சுகீசியர்கள், கிரேக்கத்திலுள்ள ரோட்ஸ் தீவினை நினைவூட்டியதாலோ, அல்லது அங்கு காணப்பட்ட செந்நிற(ரோடிச்-சிவப்பு) மண்ணாலோ இப்பெயரைச் சூட்டியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள டிவைன் ப்ராவிடன்ஸ் என்பதைக் குறிக்கும் வகையில் ப்ராவிடன்ஸ் ப்ளாண்ட்டேஷன்ஸ் என பெயரிட்ட வில்லியம்ஸ் (ஆங்கிலத்தில் ப்ளாண்ட்டேஷன்ஸ் என்பது குடியிருப்பைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.), திருச்சபையின் அதிகாரத் தலையீடு இல்லாத (மதச்சார்பற்ற!) முதல் அரசை அமெரிக்காவில் உருவாக்கினார்.