ஆந்திர பிரதேசத்தில் நடந்த பன்னி திருவிழாவில் நடந்த குச்சி சண்டையில் 50 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆந்திரப்பிரதேசம் கார்னூல் மாவட்டத்தில் ஆண்டுக்கு ஒரு முறை பன்னி திருவிழா என்ற விநோத திருவிழா நடைபெறுவது வழக்கம். மாவட்டத்தில் உள்ள தேவரகட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இந்த திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவில், உள்ளூர் தெய்வங்களின் சிலைகளை பிடித்து சடங்குகளை நடத்த குச்சிகளை கொண்டு சண்டையிடுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்த விழா விஜய தசமிக்கு அடுத்த நாளில் நடத்தப்பட்டு வந்துள்ளது. இந்த ஆண்டு கொரோனா தொற்று பாதிப்பால் குச்சி சண்டை விழாவை நடத்த மாவட்டம் முழுவதும் தடை விதிக்கப்பட்டது.
மேலும், இதனை தடுப்பதற்காக 144 தடை, மாவட்ட மற்றும் கிராம எல்லைகளில் சோதனை சாவடிகளை அமைத்து கண்காணிக்கப்பட்டது. இந்த நிலையில், இரவு 10.30 மணியளவில் ஏராளமான பொதுமக்கள் குவிந்து குச்சி சண்டை திருவிழாவை தொடங்கினார்கள். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் காவல்துறையினரால் தடுக்க முடியவில்லை. இந்த சண்டையானது செவ்வாயன்று காலை வரை தொடர்ந்தது. குச்சி சண்டையில் 50 பேர் காயமடைந்துள்ளனர். ஏற்கனவே, குச்சி சண்டை திருவிழா கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்திருந்த நிலையிலும் திருவிழா நடத்தப்பட்டுள்ளது.
இதனால், காவல்துறையினர் ஆந்திரா - கர்நாடக எல்லைகளில் 11 இடங்களில் சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளனர். அந்த கிராமங்களுக்கு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. தேவரகட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு 144 தடை உத்தரவிடப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தடை செய்யப்பட்ட திருவிழா நடத்த திட்டமிட்டது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.