பெங்களூரு, அக். 21 - தனது நிகழ்ச்சியில் சட்ட விரோதமான வகையில் பாம்பை பயன்படுத்தியதாக ‘ஈஷா யோகா அறக்கட்டளை’யின் நிறுவனரும், கார்ப்பரேட் சாமியாருமான ஜக்கி வாசுதேவ் மீது புகார் எழுந்துள்ளது. சாமியார் ஜக்கி வாசுதேவ், கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கர்நாடகா மாநிலம் சிக்பல்லபூரில், நாகபூஜை என்ற பெயரில் விழா ஒன்றை நடத்தியுள்ளார். அப்போது, நிகழ்ச்சியில் பாம்பு ஒன்றை ஜக்கி வாசுதேவ் பயன்படுத்தியுள்ளார். இது அப்போதே பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய தாக கூறப்படும் நிலையில், ஜக்கி வாசுதேவ் வன உயிரி பாதுகாப்புச் சட்டத்தை மீறி விட்டார் என்றும், தனது சுயலாபத்துக்காக நிகழ்ச்சியில் பாம்பை பயன்படுத்தியிருக்கிறார் என்று தற்போது எழுத்துப்பூர்வமாகவே புகார் கூறப்பட்டுள்ளது.
‘எஸ்பிசிஏ’ எனும் வனவிலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்புச் சங்கத்தை சேர்ந்த பிரித்திவி ராஜ் என்பவர் சிக்பல்லபூர் மாவட்ட வனத்துறை அதிகாரியிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், “ஜக்கி வாசுதேவ் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் விதிகளை மீறி சட்டவிரோதமாக சாரைப் பாம்பை பிடித்து வந்து நிகழ்ச்சியில் பயன்படுத்தி உள்ளார். அவர் பயன்படுத்திய பாம்பு என்பது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் அட்டவணை-2ன் கீழ் பாதுகாக்கப்பட்டு வரும் உயிரினமாகும். மேலும் நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்ட பாம்பு எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது தெரியவில்லை. இருப்பினும் நிகழ்ச்சிக்கு பிறகு அந்த பாம்பு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட வில்லை. இது விதிமீறலாகும். இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என பிரித்திவி ராஜ் கூறியுள்ளார். மேலும், “பொது இடத்தில் பாம்புகளை இதுபோல் காட்டுவது என்பது 1972-ஆம் ஆண்டு வனஉயிரி பாதுகாப்பு சட்டத்தின்படி குற்றம். இருப்பினும் அவர் பூஜையின்போது சாரைப் பாம்பை காட்சிப் பொருள் போலக் காட்டிக் கொண்டிருந்தார். இது முற்றிலும் சட்டத்துக்கு புறம்பானது. அதன்மீது நடவடிக்கை எடுக்கு மாறு புகார் கொடுத்துள்ளோம்’’ என்று பிரித்திவி ராஜ் பேட்டி ஒன்றையும் அளித்துள்ளார்.
‘எஸ்பிசிஏ’ எனும் வனவிலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்புச் சங்கத்தின் இந்த புகாரை தொடர்ந்து சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணையை துவங்கி உள்ளனர். இதில் விதிமீறல் இருந்தால் ஜக்கி வாசுதேவ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, “நாக பூஜையின்போது அங்கு நுழைந்த பாம்பு பாதுகாப்பு கருதி பிடிக்கப்பட்டது. தவறான நோக்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பாம்பு துன்புறுத்த ப்படவில்லை. காயப்படுத்தப்படவில்லை. ஜக்கி வாசுதேவ் பாம்மை மென்மையான முறையில் கையாண்டார். அதன்பிறகு பாம்பு வனப்பகுதியில் பத்திரமாக விடப்பட்டது’’ என ஈஷா யோகா மையம் சமாளித்துள்ளது. ஆனால், ஜக்கி வாசுதேவ், பாம்பை வைத்து வித்தைக் காட்டுவது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே பலமுறை இவ்வாறு செய்துள்ளார். ஜக்கி வாசுதேவ் ஒருமுறை பாம்புடன் பைக்கில் பயணம் செய்த படங்களும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.