states

img

மேற்குவங்கத்தில் எட்டு கட்டத் தேர்தலுக்கான காரணத்தை தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும் - சீத்தாராம் யெச்சூரி , து. ராஜா வலியுறுத்தல்

மற்ற மாநிலங்களில் ஒரே நாளில் தேர்தல் நடத்திட முடிவு செய்துள்ள தேர்தல் ஆணையம், மேற்கு வங்கத்தில் மட்டும் எட்டு கட்டத் தேர்தல் நடத்திட முடிவு செய்திருப்பதற்கான காரணங்கள் என்ன என்பதை விளக்கிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜாவும் கோரியுள்ளார்கள்.

பல மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெறுவது தொடர்பாக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புகள் குறித்து செய்தியாளர்களிடையே சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது:

கேரளம், தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஒரே நாளிலும், அஸ்ஸாமில் மூன்று கட்டமாகவும் தேர்தல் நடத்தப்படும் என்று  அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், மேற்கு வங்கத்தில் மட்டும் சுமார் ஒரு மாத காலத்திற்கு நீட்டித்து எட்டு கட்டமாகத் தேர்தல் நடத்துவதற்கு நம்பத்தகுந்தமுறையில் காரணங்கள் எதையும் இதுவரை அளித்திடவில்லை. இதற்கான காரணங்களை அது விளக்கிவிட வேண்டும்.

இந்தத் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவைகளாகும். இன்றைய தினம் அனைத்துத்தரப்பினரின் ஒட்டுமொத்த குறிக்கோள், பாஜக-வை ஒதுக்கி வைக்க வேண்டும் என்பதேயாகும். கடந்த சில மாதங்களாக திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகளை துணிவுடன் எதிர்கொண்டு, மக்கள் போராட்டங்கள் வலுவடைந்துகொண்டிருக்கின்றன.  இதிலிருந்து மதச்சார்பற்ற ஜனநாயகக் கூட்டணியான இடதுசாரிகள்-காங்கிரஸ் கூட்டணி திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு மாற்றாக வலுவாக உருவெடுத்துக் கொண்டிருப்பது நன்கு தெரிகிறது.

வங்கத்தில் பாஜக-வை தோற்கடிக்க வேண்டும் என்றால், அங்கே ஆளும் திரிணாமுல் காங்கிரசையும் சேர்த்தே தோற்கடிக்க வேண்டியது அவசியமாகும்.

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

து. ராஜா

இதேபோன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜாவும், மேற்கு வங்கத்தில் எட்டுக் கட்டத் தேர்தல் நடத்துவதற்கான காரணங்கள் என்ன என்பதை தேர்தல் ஆணையம் விளக்கிட வேண்டும் என்று கோரியுள்ளார்.

 

;