இந்தியா இந்து நாடாக மாறும் அபாயத்தில் உள்ளது என அமெரிக்க எம்பி தெரிவித்துள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து தொடர்ச்சியாக இந்துத்துவ கொள்கைளை மக்களிடத்தில் திணிக்கும் முயற்சி வெளிப்படையாக நடந்து வருகிறது. நாட்டின் பல பகுதிகளில் சிறுபான்மையினரை குறி வைத்து இந்துத்துவா அமைப்பினர் வெளிப்படையாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் இந்தியாவை இந்து நாடாக மாற்ற மோடி,அமித்ஷா தலைமையிலான இரட்டை என்ஜின் அரசு செயல்படுவதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணம் சார்பில் கடந்த 2019ம் ஆண்டு முதல் ஜனநாயக கட்சியின் எம்பியாக இருந்த லெவின் அண்மையில் நடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார்.
இந்நிலையில் பதவியில் இருந்து விலகும் முன் அவர் பிரதிநிதிகள் மாநாட்டில் ஆற்றிய உரையில் இந்தியா இந்து நாடாக மாறும் அபாயத்தில் உள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்கா மனித உரிமைகளை காப்பாற்றுவதில் அதிக வெற்றியைப் பெற்றுள்ளது, இருப்பினும் நிலைமை பல பகுதிகளில் மோசமாக இருந்தது. மதச்சார்பற்ற ஜனநாயக நாடான இந்தியா, தற்போது ஒரு இந்து நாடாக மாறும் அபாயத்தை எதிர் கொண்டுள்ளது. நான் இந்து மதத்தை நேசிப்பவன், இந்தியாவில் பிறந்த சமணம், பவுத்தம் மற்றும் பிற மதங்களை நேசிப்பவன், ஆனால் அங்குள்ள அனைத்து மக்களின் உரிமைகளையும் நாம் பாதுகாக்க வேண்டும். அவர்கள் முஸ்லீம்கள், பவுத்தர்கள், கிறிஸ்தவர்கள், ஜைனர்கள் என யாராக இருந்தாலும் சரி. இன்றைய நரேந்திர மோடியின் இந்தியா நான் காதலித்த இந்தியா கிடையாது. நான் நேசிக்கும் ஒரு நாட்டை நான் ஏன் இவ்வளவு பகிரங்கமாக விமர்சிக்க வேண்டும்? ஏனென்றால் நான் இந்தியாவை நேசிப்பதால்தான், அதன் மக்கள் மீதான தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஒரு இளைஞனாக நான் அறிந்த துடிப்பான இந்திய ஜனநாயகத்திற்கான எனது ஆதரவில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன். தலைமுறை தலைமுறையாக அந்த ஜனநாயகம் செழிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.