states

img

தில்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி- காவல்துறை தடியடி! கண்ணீர் புகை குண்டு வீச்சு

தலைநகர் தில்லியில் 72 வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அமைதி வழியில் டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட விவசாயிகள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
மோடி அரசு கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் கடந்த 2020 நவம்பர் 26ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 3 வேளாண் சட்டங்களையும் முழுமையாக திரும்ப பெரும் வரை விவசாயிகள் போராட்டம் தொடரும் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் 60 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 70க்கும் மேற்பட்டோர் போராட்டக்களத்திலேயே உயிரிழந்துள்ளனர். 
இந்நிலையில் போராட்டத்தின் ஒரு பகுதியாக குடியரசு தினமான இன்று டெல்லியில் பிரம்மாண்ட டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்திருந்தனர். மத்திய அரசுடன் 11 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் 62வது நாளான இன்று டிராக்டர் பேரணியை விவசாயிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
தற்போது டெல்லி சிங்கு எல்லையில் காவல்துறை தடுப்புகளை மீறி விவசாயிகளின் டிராக்டர் பேரணி தொடங்கி உள்ளது. டெல்லி - ஹரியானா எல்லையான சிங்குவில் இருந்து ஏராளமான விவசாயிகள் டிராக்டர்களில் பேரணியை தொடங்கினர். ஹரியானா எல்லையான சிங்குவில் இருந்து தொடங்கும் பேரணி கன்ஜாவாலா , பவானா , அவுசான்டி எல்லை , கே.எம்.பி.எக்ஸ்பிரஸ் வழியாக மீண்டும் சிங்குவை சென்றடையும். இதையடுத்து திக்ரி எல்லையில் இருந்து தொடங்கும் பேரணி நாக்லோ , நஜாப்கர் , மேற்கு எல்லைப் பகுதி எக்ஸ்பிரஸ் வே வழியாக மீண்டும் திக்ரியை சென்றடையும். மூன்றாவதாக டெல்லி - உத்தரப்பிரதேச எல்லையான காஜிப்பூர் எல்லையில் இருந்து தொடங்கும் பேரணி குன்ட்லி , காஜியாபாத் , பல்வால் எக்ஸ்பிரஸ் வே வழியாக சென்று மீண்டும் காஜிப்பூரை அடையும். சுமார் 100 கிலோமீட்டருக்கு நடைபெறும் இந்த பேரணி மாலை ஆறு மணிக்கு முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு டிராக்டர் பேரணிக்கு போலீசாரால் அனுமதி வழங்கப்பட்டது. எனினும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பேரணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்த தடியடி நடத்தி உள்ளனர்.மேலும் கண்ணீர் புகைகுண்டுகளையும் வீசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தில்லியில் பதற்றமான சூல் ஏற்பட்டுள்ளது. காவல்துறையின் பல கட்ட கடுப்புகளையும் மீறி விவசாயிகள் தில்லி செங்கோட்டையை அடைந்துள்ளனர். 

;