states

img

தாத்தாவுக்கு ஏற்பட்ட கதி யாருக்கும் ஏற்படக்கூடாது மோசமான சாலையை சீரமைத்த சிறுவன்

புதுச்சேரி, ஜன. 22- ஏழு ஆண்டுகளாகச் சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக இருந்த சாலையால் தனது தாத்தாவிற்கு அடிப்பட்டது போல், வேறு யாருக்கும் அடிபடாமல் இருக்கத் தனி ஒருவனாகச் சாலையைச் சீரமைத்த சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்த வன்னம் உள்ளன. புதுச்சேரி வில்லியனூர் பத்துக்கண்ணு சாலை பிரதான சாலையாக உள்ளது. தினசரி ஏராளமான வாகனங்கள் இச்சாலை வழியாகச் சென்று வருகின்றன. கடந்த 7 ஆண்டுகளாக இச்சாலை சீரமைக்கப்படாததால் ஆங்காங்கே ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கிறது. சில இடங்களில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் தினசரி விபத்துக்குள்ளாகின்றனர். இந்நிலையில் சேந்தநத்தம் பகுதியைச் சேர்ந்த சேகர் (60) தனது மோட்டார் சைக்கிள் இச்சாலை வழியாகக் கடந்த வியாழக்கிழமை செல்லும் போது பள்ளத்தில் விழாமல் இருக்க பிரேக் போட்டுள்ளார். அப்போது பின்னால் வந்த பைக் மோதி கீழே விழுந்ததில், அவருக்குக் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே அரசுப் பள்ளியில் 8ஆம் வகுப்பு பயிலும் அவரது பேரன் மாசிலாமணி (13) தனது தாத்தா விழுந்த பள்ளத்தில் மற்ற யாரும் விழுந்து அடிப்படக் கூடாது, ஏதேனும் உயிர்ச் சேதம் ஏற்படக்கூடாது என்று எண்ணி சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார்.  ஒரு சிறுவன் தனி ஒரு ஆளாய் நின்று ஆங்காங்கே கிடக்கும் சிமெண்ட் கற்கள், சாலையோரம்  உள்ள மணல் ஆகியவற்றைச் சேகரித்து  சாலையைச் சீரமைத்தார். இதன் பின்னராவது அரசு விழித்துக்கொண்டு இந்த சாலையைச் சீரமைக்குமா?  என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.