புதுச்சேரி, மே 5- புதுச்சேரியில் 41 மையங்களில் 14,627 மாணவர்கள் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதினர். கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டு களாக நேரடி பொதுத்தேர்வு நடை பெறாமல் இருந்தது. தற்போது தொற்று குறைந்துள்ள நிலையில் நேரடி வகுப்புகள் துவங்கப்பட்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 12ஆம் வகுப்பு தேர்வுகள் வியாழனன்று (மே 5) புதுவையில் தொடங்கியது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியத்தைச் சேர்ந்த 6,972 மாணவர்கள், 7,655 மாணவிகள் என மொத்தம் 14,627 பேர் தேர்வு எழுதினர். புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 41 தேர்வு மையங்கள் இதற்காக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் தேர்வு எழுதுவதை கண்காணிக்க 7 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக தேர்வு எழுத வந்த மாணவர்கள் முகக்கவசம் அணிந்து, கிருமி நாசினிகள் கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னர் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.