பீகார் மாநிலம் சம்ஸ்திபூரில் கலீல் ஆலம் ரிச்வி என்ற இஸ்லாமிய இளைஞர் கடத்தி கொலை செய்யப்பட்டதற்கு வகுப்புவாத உள்நோக்கம் இருக்கலாம் என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
பிப் 19-ஆம் தேதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான காணொளியில், முஷ்ரிகாரரியில் பசு மாடு கொல்லப்படுவதற்கு யார் காரணம் என கடத்தல்காரர்கள் ரிஸ்வியிடம் கேள்வி எழுப்பும் காட்சி பதிவாகியுள்ளது.
சமூக சேவகராக இருந்து வரும் கலீல் ஆலில் ரிஸ்வி, பீகாரின் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் உறுப்பினராகவும் உள்ளார்.
பிப்.16-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி சென்ற பிறகு, கடத்தல்காரர்கள் ரிஸ்வியை விடுவிக்க பணம் கேட்டுள்ளனர்.
இது தொடர்பாக தி வயர் ஊடகத்திடம் பேசிய ரிஸ்வியின் சகோதரர் சகீல், பிப்.16-ஆம் தேதி காலை 11 மணிக்கு கலீல் வீட்டை விட்டு வெளியே சென்றார். அப்போது அவர் கடத்தப்பட்டிருக்கிறார். அன்று மாலை ரிஸ்வியின் செல்போனில் இருந்து 5 லட்சம் கேட்டுக் கடத்தல்காரர்கள் மிரட்டினார்கள் என தெரிவித்துள்ளார்.
பின்னர் அப்பாவின் செல்போனிற்கு அழைத்த கடத்தல்காரர்கள் 3 லட்சத்து 75 ஆயிரம் பணம் அளித்தால் தான் ரிஸ்வியை விடுவிக்க முடியும் என கூறியுள்ளனர். பணத்தை ஒரு வங்கி கணக்கில் செலுத்துமாறு கூறியுள்ளனர். அதன்பிறகு அவர்களிடம் இருந்து எந்த அழைப்பு வரவில்லை என கூறியுள்ளார்.
இது தொடர்பாக முஷ்ரிகாரி காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்.19 அன்று சம்ஸ்திபூரில் வசிக்கும் ஜா என்பவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான காணொளியில், ரிஸ்வி கடத்தல்காரர்களால் தாக்கப்படும் சம்பவம் பதிவாகியுள்ளது.
மேலும், அந்த பதிவில் இந்த காணொளியை இந்து சகோதரர்கள் அனைவரும் பார்க்குமாறும், ஏழைகளை கொள்ளையடித்து மாடுகளை உண்பவர்கள் பயப்படுவதற்கும், பசுவை யாரும் தொட துணியாமல் இருப்பதற்கும் இந்து சகோதரர்கள் அனைவரும் முடிந்தவரை இதைப் பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
ரிஸ்வியின் கொலைக்கு வகுப்புவாத உள்நோக்கம் காரணமாக இருக்கலாம் என தெரிவித்து ரிஸ்வியின் சகோதரர், இது பணம் பெருவதற்காக கடத்தப்படவில்லை. அவர்கள் மாட்டிறைச்சியை உண்டதற்காக ரிஸ்வியை கொன்றுள்ளார்கள் . இது ஒரு திட்டமிட்ட பட்கொலை என தெரிவித்துள்ளார்.