ஹைதராபாத்: இறந்தவர்களின் வீட்டில் பறை அடிக்க மறுத்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தைக் கிராம மக்கள் ஒதுக்கி வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் உள்ள மேடக் மாவட்டத்தின் கௌடோஜிகுடா கிராமத்தில் பஞ்சமி சந்திரம், பஞ்சமி அர்ஜுன் என்ற சகோதரர்கள் தங்களது தாயாருடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இறந்தவரின் குடும்பத்தினர் அதே ஊரைச் சேர்ந்த பஞ்சமி சந்திரம் என்பவரது குடும்பத்தினரிடம் இறுதி ஊர்வலத்தில் பறை அடிக்குமாறு கேட்டுள்ளனர்.
ஆனால், வழக்கமாக இறப்பு வீட்டில் பறை அடித்து வந்த அவர்களின் குடும்பத்தினர், தற்போது அந்தத் தொழிலை விட்டுவிட்டதாகக் கூறினர்.
பஞ்சமி சந்திரம், முதுகலைபட்டம் பெற்றுப் பல தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார். அவரது தம்பி முதுகலைப் பட்டம் முடித்து தற்போது ஒரு மருந்து நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்தக் கிராமத்தில் முதுகலை முடித்த இளைஞர்கள் இந்த இருவர் மட்டுமே எனக் கிராம மக்கள் தெரிவித்தனர். இவர்களது தந்தை சங்கரய்யா பறை அடிக்கும் தொழிலைச் செய்து வந்தார். அவர் 2015-இல் இறந்துவிட்டார்.
தனியார் நிறுவனத்தில் பணி புரிந்த சந்திரம் திருமணம், இறுதிச் சடங்குகள், மற்றும் திருவிழாக்களின் போது பறை அடிப்பதற்காக விடுமுறை எடுத்ததால், வேலையிலிருந்து நீக்கப்பட்டார். இதனால் அவர் பறை அடிப்பதை நிறுத்தி ஐந்து வருடங்களாகிறது.
இதுகுறித்து பஞசமி சந்திரம் கூறும்போது;
செப்டம்பர் 10-ஆம் தேதி பஞ்சாயத்துக்குப் போனோம். 'பறை அடிக்க முடியுமா முடியாதா' என்று கேட்டார்கள். எங்கள் இடத்தில் யாரேனும் பறை வாசிக்க விரும்பினால் அடிக்கலாம் என்றோம். ஆனால் அதற்கு யாரும் முன்வரவில்லை,” என்றார்.
என் தந்தையின் பெயரைக் குறிப்பிட்டு எங்களை அவமானப்படுத்தினர், உன் தந்தை பறை அடித்தவர் தானே? அவருக்குப் பிறந்த நீ, பறை அடிக்கக் கூடாதா? என்று அவமதித்தனர்.
அவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கிறோம் என்று பஞ்சாயத்தில் தீர்மானம் எழுதினார்கள். அவர்களிடம் யாரேனும் பேசினால் அவர்களுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்தனர்,
இதனால் அவர்களுடன் யாரும் பேசுவதில்லை அப்படிப் பேசுபவர்களை ஆதிக்கச் சாதியினர் அடித்துத் துன்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
படிக்காததால் அப்பா பறை அடித்தார். ஆனால் இப்போது எங்கள் தலைமுறையினர் படித்திருக்கிறோம். சாதிவெறியால் எங்களையும் பறை அடிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்துவது நியாயமா? கிராமத்தில் உள்ள சிலர் நாங்கள் படிப்பதையும் வளர்வதையும் விரும்பவில்லை. அதனால்தான் இதெல்லாம் நடந்தது, என்று தனது ஆதங்கத்தைப் பஞ்சமி சந்திரம் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் செய்திகளில் வெளியானதையடுத்து அந்த கிராமத்தைச் சேர்ந்த முன்னால் ஊர்த் தலைவர் உட்பட 31 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.