பத்தனம்திட்டா, ஜூன் 18- கேரளத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ளது அருவாபுரம் கிராம பஞ்சாயத்து. இங்குள்ள விவசாயிகள் இயற்கை முறையில் நெல் உற்பத்தி செய்து, அருவாபுரம் குத்தரிசி என்கிற பெயரில் சந்தைப்படுத்தி உள்ளனர். இதற்கு உந்துசக்தியாக இருந்து கேரளத்தின் மிக குறைந்த வயது பஞ்சாயத்து தலைவர் ரேஷ்மா மரியம் ராய் சாதனை படைத்துள்ளார். கால் நூற்றாண்டாக தரிசாக கிடந்த 15 ஏக்கர் நலத்தை பண்படுத்தி கடந்த நவம்பரில் நெல் விதைத்தனர். பிப்ரவரியில் 18 டன் நெல் விளைந்தது . அதை அரைத்து கிராமத்தில் உள்ள கிருஷி பவனில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். இதன் மூலம் நாட்டின் முதலாவது ஸ்மார்ட் கிருஷி பவன் என்கிற பெருமையை அருவாபுரம் பெற்றுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் ஜெனிஷ்குமார் தலைமையில் அருவாபுரத்தில் நடந்த துவக்க விழாவில் இதனை அதிகாரப்பூர்வமாக வெள்ளியன்று (ஜூலை 16) வேளாண் துறை அமைச்சர் பி பிரசாத் அறிவித்தார். 25 ஆண்டுகளாக ரப்பர் போன்ற இதர பயிர்களை சாகுபடி செய்த அருவாபுரம் மக்கள் நெல் இயக்கத்துக்கு ஒத்துழைத்ததாக கூறுகிறார் பஞ்சாயத்து தலைவர் ரேஷ்மா மரியம் ராய். ஆகஸ்ட்டில் அடுத்த போக நெல் சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகிறார்கள். ஒரு எக்டேர் நெல் விவசாயத்திற்கு கிருஷி பவன் ரூ.65,500 வழங்கியுள்ளது. நெல் விவசாயத்தில் ஈடுபட்டு நிரந்தர வருவாய் ஈட்ட நவீன வேளாண் முறைகளை வேளாண் துறை பயிற்றுவித்து வருகிறது. 15 வார்டுகளுக்கும் நெல்சாகுபடியை விரிவுபடுத்த 80 லட்சம் ரூபாய் பஞ்சாயத்து பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.