அகமதாபாத், ஏப். 29 - குற்றவியல் அவதூறு வழக்கில், தமக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து, ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை மே 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து குஜராத் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. “தனக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கும் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று ஒரு மனுவும், வழக்கு முடியும்வரை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மற்றொரு மனுவுமாக, சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில், கடந்த ஏப்ரல் 3 அன்று, இரண்டு மேல்முறையீட்டு மனுக்களை ராகுல் காந்தி தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீடு மீது, ஏப்ரல் 13 அன்று சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ராபின் மொகேரா அமர்வில் விசாரணை நடை பெற்றது. ராகுல் காந்தியும் நேரில் ஆஜரானார். அவரது சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆர்.எஸ். சீமா, கிரிட் பன்வாலா ஆகியோர் ஆஜராகினர். வழக்கறிஞர் சீமா வாதிடுகையில், “அவதூறு சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட நபர் மட்டுமே புகார் அளிக்க முடியும். எனவே, பூர்ணேஷ் மோடி புகார் அளிக்க சட்டத்தில் இடம் உள்ளதா? என்பதை நீதிமன்றம் ஆய்வு செய்ய வேண்டும். மோடி என்ற குடும்பப் பெயரை அவதூறு செய் யும் நோக்கம் பேசியவரிடம் இருந்ததா என்ப தைக் கண்டறிய ராகுல் காந்தியின் உரையை சூழலுக்கு ஏற்ப பகுப்பாய்வு செய்ய வேண்டும்.
இந்த வழக்கு பிரதமர் மோடிக்கு எதிராக விமர்சன ரீதியாக பேசியதன் விளைவு அன்றி வேறில்லை” என்று எடுத்துரைத்தார். ராகுலின் 2 ஆண்டு சிறைத் தண்டனைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். எனினும், கடந்த ஏப்ரல் 20 அன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ராபின் மொகேரா, 2 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து, ராகுல் காந்தியின் மனுவை தள்ளுபடி செய்தார். இதனை எதிர்த்து, ராகுல் காந்தி குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதி கீதா கோபி விசாரிப்பார் என்று கூறப்பட்ட நிலையில், அவர், திடீரென வழக்கு விசாரணையிலிருந்து விலகிக் கொண்டார். இதையடுத்து, சனிக்கிழமையன்று இந்த வழக்கு நீதிபதி ஹேமந்த் பிரச்சக் முன்பு விசாரணைக்கு வந்தது. ராகுல் காந்தி சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜராகி வாதாடினார். பிரதமர் மோடி குறித்து பேசியதாக கூறப்படும் ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டில் எந்தவித ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதை யும், எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான இதேபோன்ற குற்ற வழக்குகளில், தண்டனையை உயர்நீதி மன்றங்கள் தலையிட்டு நிறுத்தி வைத்துள்ளதை யும் அபிஷேக் சிங்வி சுட்டிக்காட்டினார். இந்நிலையில், இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மே 2-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி ஹேமந்த் பிரச்சக் உத்தர விட்டுள்ளார்.