states

வீடு, வாகனம், தனிநபர் கடனுக்கான வட்டி விகிதங்கள் உயர்ந்தன

புதுதில்லி, டிச. 9 - ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 6.25 சதவிகிதமாக உயர்த்திய நிலையில், நாட்டிலுள்ள பல்வேறு பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளும் தங்களின் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன. இது சாதாரண மற்றும் நடுத்தர குடும்பத்தினரின் செலவினத்தில் மேலும் சுமையை ஏற்றியுள்ளது. ரிசர்வ் வங்கியின் 3 நாள் நாணயக் கொள்கைக் குழு கூட்டம் (monetary policy committee meeting - MPC) கடந்த டிசம்பர் 5 முதல் 7-ஆம் தேதி வரைநடைபெற்றது. இதன் முடிவில், ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதம் 35 அடிப்படைப் புள்ளிகள் வரை உயர்த்தப்பட்டன. ரெப்போ விகிதம் இந்தாண்டின் துவக்கத்தில் 4 சதவிகிதமாக இருந்தது. அதனை மே மாதம் 0.40 புள்ளிகள், ஜூன் மாதத்தில் 0.50 புள்ளிகள், ஆகஸ்டில் 0.50 புள்ளிகள், செப்டம்பரில் 0.50 புள்ளிகள் என்று அதிகரித்த ரிசர்வ் வங்கி- 5.90 சதவிகிதத்திற்கு கொண்டு சென்றது.  இந்நிலையில், டிசம்பர் 7-ஆம் தேதி மேலும் 35 புள்ளிகள் உயர்த்தப்பட்டதால், ஒட்டுமொத்த ரெப்போ விகிதம் 6.25 சதவிகிதத்தை தொட்டது. நடப்பு நிதியாண்டில் மட்டும் 2.25 சதவிகிதம் அளவிற்கு ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டது.

ரிசர்வ் வங்கி நாட்டின் பிற வணிக வங்கிகளுக்கு குறுகிய கால அடிப்படையில் கொடுக்கும் கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதமே ரெப்போ விகிதம் (Repo Rate) எனப்படும் நிலையில், ரிசர்வ் வங்கி வட்டியை உயர்த்தும் போது, வணிக வங்கிகளும் தங்களின் வட்டி விகிதத்தை உயர்த்துவது வழக்கமான மற்றும் தவிர்க்க முடியாத விளைவாகும்.  அந்த வகையில், கடந்த டிசம்பர் 7-ஆம் தேதி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் ரெப்போ விகிதத்தை 35 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்துவதாக அறிவித்தபோதே, பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளும் தாங்கள் வழங்கியுள்ள கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது தற்போது நடந்துள்ளது.  பாங்க் ஆப் பரோடா, பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தனியார் வங்கிகளான எச்டிஎப்சி, ஐசிஐசிஐ உள்ளிட்ட வங்கிகள், வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடனுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளன. ‘பாங்க் ஆப் பரோடா’வின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, சில்லரைக் கடன்களுக்கான குறைந்தபட்ச வட்டி விகிதம் (Baroda Repo Linked Lending Rate) 8.85 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது முன்பு 6.25 சதவிகிதமாக இருந்த நிலையிலிருந்து 2.60 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த மாற்றங்கள் டிசம்பர் 8 முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

‘இந்தியன் ஓவர்சீஸ் வங்கி’, வீட்டுக் கடன்களுக்கான வட்டியை உயர்த்தியுள்ளது. நிதிகளின் மார்ஜினல் காஸ்ட்- அதாவது எம்சிஎல்ஆர் (MCLR) 15 முதல் 35 அடிப்படை புள்ளிகள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக வங்கி கூறியுள்ளது. இதனுடன், வங்கி ரெப்போ இணைக்கப்பட்ட கடன் விகிதத்தையும் (Repo Linked Lending Rate - RLLR)) 9.10 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இந்த வட்டி உயர்வு மாற்றங்கள் டிசம்பர் 10 முதல் நடைமுறைக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது. இதுதவிர, வேறு பல கடனுக்கான வட்டி விகிதங்களையும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உயர்த்தியுள்ளது. இதில், 1 ஆண்டுக்கான எம்சிஎல்ஆர் 8.15 சதவிகிதமாகவும், 6 மாத எம்சிஎல்ஆர் 7.90 சதவிகிதமாகவும் மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் டிசம்பர் 7 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

‘பாங்க் ஆப் இண்டியா’ அதன் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, ரெப்போ விகிதத்தில் திருத்தம் செய்யப்பட்ட பிறகு, ரெப்போ அடிப்படையிலான கடன் விகிதம் - அதாவது ஆர்பிஎல்ஆர் (RBLR) 9.10 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.  தனியார் துறை வங்கியான எச்.எப்.டி.சி., அதன் எம்.சி.எல்.ஆர்., அடிப்படையிலான வட்டியை உயர்த்தி உள்ளதாக தெரிவித்து உள்ளது. இவ்வங்கி, ஓராண்டுக்கான அதன் பல்வேறு நுகர்வோர் கடனுக்கான வட்டியை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 8.60 சதவிகிதமாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே, எம்சிஎல்ஆர் கடன்களுக்கான வட்டி விகிதத்தை கடந்த டிசம்பர் 1 முதல் உயர்த்திய ஐசிஐசிஐ வங்கி, ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகித திருத்தத்தைத் தொடர்ந்து, ஓராண்டுக்கான குறியீட்டு எம்சிஎல்ஆர் வட்டி விகித்தை 7.90 சதவிகிதத்திலிருந்து 8.40 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது என்று வங்கித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.