states

img

அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள்க!

புதுதில்லி, ஏப்.3- “அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள்க” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்  பிடிஐ நிறுவனத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் வேண்டுகோள் விடுத்தார். மூன்று நாள் பயணமாக தலைநகர் புதுதில்லிக்கு வருகை தந்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், மாநிலக் கட்சிகள், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் அனைத்தும் பாஜகவுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் தங்களுடன் கொள்கை ரீதியான நட்புறவு கொண்டிருப்பதைப் போன்று அகில இந்திய அளவிலும் பிற அரசியல் கட்சிகளுடன் “கொள்கை ரீதியான நட்புறவை” மேம்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அனைத்து எதிர்க்கட்சிகளும்  “ஒற்றுமையே பலம்” என்று உணர வேண்டும்!

காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் மற்றும் பாஜகவை எதிர்க்கும் அனைத்து மாநிலக் கட்சிகள் இணைந்த ஐக்கிய முன்னணி அமைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்த மு.க.ஸ்டாலின், ஒவ்வொருவரும் தங்கள் தனிப்பட்ட அர சியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு “இந்தியாவைக் காக்க ஒன்றுபட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். அவர் மேலும் கூறுகையில், “என்னுடைய வேண்டு கோள்; நாம் இந்தியாவின் பன்முகத் தன்மை, கூட்டாட்சி முறை, ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம், மாநில உரிமைகள், கல்வி உரிமைகள் ஆகியவற்றைப் பாதுகாக்க விரும்பினால், நாம் அனைவரும் நம்முடைய சொந்த தனிப்பட்ட அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றுபட வேண்டும் என்பதுதான்” என்றார். “அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமைதான் பலம் என்பதை உணர வேண்டும். ஒவ்வொருவரும் இந்தியா வைக் காக்க ஒன்றுபட வேண்டும்” என்று கூறினார்.

தேசிய அரசியலில்  திமுக முக்கியப் பங்காற்றும்!

அவர் மேலும் கூறுகையில், “திமுக எப்போதும் தேசிய  அரசியலில் மிகவும் முக்கியப் பங்கை வகித்து வந்துள்ளது. அது எப்போதும் தொடர்ந்து அவ்வாறே இருக்கும்” என்று உறுதியளித்தார். “தேசிய அரசியலில் எங்களுடைய முக்கியத்துவம் எப்போதுமே இருந்துள்ளது. யார் நாட்டின் பிரதமராக வரவேண்டும் அல்லது குடியரசுத் தலைவராக வரவேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில் திமுக முக்கியப் பங்காற்றி வந்துள்ளது. திமுக தற்போது நாடாளுமன்றத்தில் மூன்றா வது பெரிய கட்சியாகவும் உள்ளது. புதிய அலுவலகத்தைத் திறந்திருப்பது திமுக தேசிய அரங்கத்தில் தனது இருப்பை வளர்த்துக் கொள்வதற்கான அறிகுறி என்று சொல்வது தவறானதாகும்’’ என்று கூறினார்.

மாநில, தேசிய அரசியலைப் பிரிக்க முடியாது!

“மாநில அரசியலுக்கும் தேசிய அரசியலுக்கும் இடையே வித்தியாசம் எதுவும் இருப்பதாக நான் கருத வில்லை” என்று கூறிய மு.க.ஸ்டாலின், “தேசிய அரசியல் என்பது மாநில அரசியலின் இணைப்புதான் எனவே இரண்டையும் பிரிக்க முடியாது” என்று குறிப்பிட்டார்.

பாஜகவை எதிர்ப்பது  கொள்கைகளுக்காக மட்டுமே!

பல்வேறு சந்தர்ப்பங்களில் பாஜக மீதான தனது கடுமை யான தாக்குதலைப் பற்றிக் கூறிய மு.க.ஸ்டாலின், “பாஜகவை எதிர்ப்பது என்பது ஒரு அரசியல் கட்சி மீதான எந்தவிதமான தனிப்பட்ட கருத்தும்  ஏற்பட்டதல்ல, நீங்கள் அவ்வாறு சிந்திக்கக் கூடாது. நாங்கள் பாஜகவின் கொள்கை களைத்தான் விமர்சிக்கிறோம். தனிப்பட்ட மனிதர்களை அல்ல. எனவே எங்களுடைய எல்லா விமர்சனங்களும் கொள்கை அடிப் படையிலானது. இதை நாங்கள் எப்போதும், எந்தச் சூழ்நிலையிலும் செய்வோம்” என்று விளக்கம் அளித்தார்.

பாஜகவை தமிழகத்தில்  ஓரம் கட்டிவிட்டனர்!

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்பட சில பகுதிகளில் செய்யப்படும் விவாதங்களில், “காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள சரிவின் காரணமாக, பாஜகவுக்கு எதிரான நடவடிக்கைகளில் மாநிலக் கட்சிகள் தலைமை வகிக்க வேண்டும்’’ என்று கூறப்படுவது பற்றிக் கேட்ட போது, “இந்தக் கருத்து சில மாநிலங்களில் சரியாக இருக்க லாம். ஆனால் அது பல மாநிலங்களில் அது தவறாக வழி நடத்தப்பட்டுவிடும்” என்று ஸ்டாலின் கூறினார். “என்னைப் பொறுத்தவரை, பாஜகவை எதிர்க்கும் அனைத்து மாநிலக் கட்சிகளும், காங்கிரஸ் கட்சியுடனும், இடதுசாரி கட்சிகளுடனும் கைகோர்த்துக் கொண்டு பாஜகவுக்கு எதிரான ஓர் அணியை அமைக்க வேண்டும்” என்றார். தங்கள் கட்சியும் தங்கள் தோழமைக் கட்சிகளும் தமிழ்நாட்டில் அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளையும் ஒன்றுதிரட்டி பாஜகவை ஓரம் கட்டிவிட்டன என்றும் அவர் கூறினார்.

தோழமைக் கட்சிகளுடன்  ஒருமித்த கொள்கை உணர்வு வேண்டும்!

“நாங்கள் (தோழமைக் கட்சிகள்) எல்லோரும் தொடர்ந்து ஒரு கொள்கை உறவைக் கொண்டிருக்கிறோம். தேர்தல் காலத்தில் தொகுதிகளைப் பகிர்ந்து கொள்கிறோம். அது தான் எங்களுடைய வெற்றியின் அடித்தளம் ஆகும். அத்த கைய கொள்கை ரீதியிலான நட்புறவை அகில இந்திய ரீதியில் காங்கிரஸ் கட்சி மேம்படுத்த வேண்டும் என்பது என்னுடைய விருப்பமாகும். தமிழ்நாட்டுக்கு பிரச்சாரத்து க்கு வந்தபோது என்னுடைய சகோதரர் ராகுல் காந்தியை மேடையில் அறிமுகப்படுத்தியபோது நான் இதைத் தெரி வித்தேன். நான் மீண்டும் காங்கிரஸ் கட்சியை வலி யுறுத்துகிறேன். அத்தகைய பார்வையை காங்கிரஸ் கட்சி உருவாக்குவதில் அனைத்து மாநிலங்களிலும் செலுத்த வேண்டும் என்று நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

பாஜகவுக்கு எதிரான ஐக்கிய முன்னணியில் காங்கிரஸ் கட்சி, அவருடைய கட்சியை தோழமைக் கட்சியாகக் கருதி தெற்கில் அதற்கு நாகரிகமான தேர்தல் பிரதிநிதித்துவம் வழங்கியதா என்று கேட்கப்பட்டபோது, மு.க.ஸ்டாலின், “நாங்கள் காங்கிரஸ் கட்சியுடன் எந்தத் தேவைக்காகவும் பணியாற்றவில்லை. நாங்கள் பொதுக் கொள்கையின் ஒப்பந்தங்களின் அடிப்படையில் இணைந்து பணியாற்றினோம்” என்று பதிலளித்தார்.

ஒன்றிய அரசு தன் அமைப்புகளை அரசியலுக்குப் பயன்படுத்துகிறது!

பாஜக கூட்டணி அல்லாத கட்சிகள் அனைத்தும், உண்மையில் ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்புகள் பாஜகவின் தேர்தல் சாதனமாக எதிர்க்கட்சிகளைக் குறி வைத்து தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்று குற்றம்சாட்டி வருவது பற்றிக் கேட்டபோது, அவர், “இது உண்மைதான், ஒன்றிய அரசு தன்னுடைய எல்லைக்குள் உள்ள அமைப்புகளை அரசியல் காரணங்களுக்காகப் பயன்படுத்துகிறது. எல்லோரும் இதை அறிவார்கள். சில நேரங்களில் நேரடியாகவும், சில நேரங்களில் மறைமுகமாகவும் அதைச் செய்து வருகிறார்கள்” என்றார்.

(பிடிஐ)