புதுதில்லி, ஜன.28- அமெரிக்காவை சேர்ந்த ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ (Hindenburg Research) நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை, அதானியின் சாம்ராஜ்யத்தை உலுக்கிப் போட்டுள்ளது. அதானி குழும பங்கு மதிப்பு, இரண்டே நாட்களில் ரூ. 4 லட்சத்து 17 ஆயிரம் கோடி அளவிற்கு காணாமல் போயுள்ளது. உலகப் பணக்காரர்கள் வரிசையில், கடந்த ஜனவரி 25 வரை 3-ஆவது இடத்தில் இருந்த கவுதம் அதானி, தற்போது 7-ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். அவரின் சொத்து மதிப்பு 96.5 பில்லியன் டாலர்களாக சரிந்துள் ளது. சுமார் 22.7 பில்லியன் டாலர்களை (1.84 லட்சம் கோடி ரூபாய்) அவர் இழந்துள்ள தாக ‘போர்ப்ஸ்’ (Forbes) இணையதளம் கூறுகிறது. கொரோனாவுக்கு பிந்தைய 2 ஆண்டு களில் அதானி குழும நிறுவனங்களின் சொத்து மதிப்பு 819 சதவிகிதம் அதிகரித்த நிலையில், இதுதொடர்பாக ‘ஹிண்டன் பர்க் ரிசர்ச்’ நிறுவனம் ஆய்வு மேற் கொண்டது. அதன் முடிவில், கடந்த ஜனவரி 24 அன்று வெளியிட்ட அறிக்கைதான் தற் போது அதானி குழுமம் கீழே இழுத்துப் போட்டுள்ளது.
பங்குச்சந்தையில் லாபமீட்டுவதற்கு ‘குறுகிய காலம்’ (Short Position) மற்றும் ‘நீண்டகாலம்’ (Long Postion) என இரண்டு நிலைகள் உள்ளன. இதில், குறுகிய கால நிலையைப் பொறுத்தவரை, ஒரு நிறு வனத்தின் பங்கு விலை குறையும் என உறுதி செய்து முதலீடு செய்வது ஆகும். இதில் பங்கு விலை குறைந்தால் மட்டுமே முதலீட் டாளர்களுக்கு லாபம் கிடைக்கும். நீண்ட கால நிலையைப் பொறுத்தவரை, பங்கு விலை பங்கு விலை உயரும் என முடிவு செய்து, அதில் முதலீடு செய்வது ஆகும். இதில், பங்கு விலை உயர்ந்தால் மட்டுமே லாபம். இந்த இரண்டிலும் பங்குகளை நேரடியாக வாங்க முடியாது. ஏற்கெனவே நிறுவன பங்குகளை வைத்திருப்பவர்களி டம் இருந்து கடனாகப் பெற்றுத்தான் வாங்க முடியும். ஆனால், ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ நிறுவன மானது, இந்த இரண்டு நிலை முதலீட்டி லும் சிறந்து விளங்கும் ஒரு நிறுவனமா கும். அதுமட்டுமல்ல, சந்தையில் கோலோச் சும் கார்ப்பரேட் நிறுவனங்கள், முதலீட்டுச் சந்தையில் நியாயமாக நடந்து கொள் கின்றனவா, அவற்றின் உண்மையான மதிப்பு என்ன? முறைகேடு செய்து மதிப்பை உயர்த்தியிருக்கிறார்களா? என்று ஆய்வு செய்து, தவறுகளைக் கண்டுபிடிப்பதிலும் ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ நிறுவனம் கெட்டிக் கார நிறுவனமாகும். அதனாலேயே அது லாபமீட்டும் நிறுவனமாகவும் விளங்குகிறது.
இவ்வாறு கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்யும் முறைகேடுகளைக் கண்டுபிடிப்ப தில் பெரிய ‘டிராக் ரெக்கார்டை’யும் ஹிண் டன்பர்க் ரிசர்ச் வைத்துள்ளது. 2017 முதல் சுமார் 16 நிறுவனங்களின் முறைகேடு களைக் கண்டுபிடித்து ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள் ளது. அண்மையில் அமெரிக்காவைச் சேர்ந்த ‘எலக்ட்ரிக் டிரக்’ தயாரிப்பு நிறுவ னமான ‘நிகோலா கார்ப்’ (Nikola Corp) நிறுவனம் ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ ஆய்வில் சிக்கியது. அதன்மூலமாக, சுமார் 34 பில்லி யன் டாலர் மதிப்புடைய ‘நிகோலா கார்ப்’ நிறுவனம் வெறும் 1.34 பில்லியன் டாலர் மதிப்பிற்கு அதலபாதாளத்தில் விழுந்தது. எனவே, ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ ஆய்வு என்றால், அதில் சந்தேகமே கொள்ள வேண்டியதில்லை என்ற அளவிற்கு உலக முதலீட்டாளர்கள் கண்ணை மூடிக் கொண்டு நம்பிக்கை வைப்பார்கள். அப்படித்தான் அதானி குழுமம் குறித்து ‘ஹிண்டன்பக் ரிசர்ச்’ வெளியிட்ட அறிக்கை யும் முதலீட்டாளர்களின் கவனத்தைப் பெற்றது. அதானி குழும முதலீட்டாளர்கள், கொஞ்சமும் யோசிக்காமல் தங்களின் பங்கு களை விற்றுவிட்டு ஓட ஆரம்பித்தனர். விளைவு, அதானி குழும பங்குகள் 2 நாட்க ளில் 4 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான சந்தை மதிப்பை இழந்து அதிர்ந்து கிடக்கிறது. 2021-இல் இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள 4 அதானி குழும நிறுவனங்களில் 43 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வைத்தி ருக்கும் 3 அந்நிய போர்ட்போலியோ முத லீட்டாளர்களின் கணக்கை என்எஸ்டிஎல் (NSDL) அமைப்பு முடக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் 2 அந்நிய போர்ட்போலியோ கணக்கின் மீதான விசார ணையை ஏற்கெனவே ‘செபி’ நடத்தி வருகிறது.
ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளி யாவதற்கு சில மாதங்களுக்கு முன்புதான், பின்ச் (Finch) குரூப் நிறுவனத்தின் கிளை நிறுவனமான ‘கிரடிட்சைட்ஸ்’ (CreditSights) நிறுவனமும் அதானி குழு மம் பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிட்டி ருந்தது. அதில், அதானி குழுமத்தை அதிகள வில் மிகைப்படுத்தப்பட்ட (“Deeply Overleveraged”) நிறுவனம் என்று வகைப் படுத்தி இருந்தது. அதானி குழுமம், கடன் மற்றும் பிற அபாயங்களை எதிர்நோக்கி இருப்பதாக முதன்முதலாக அறிவித்தது. இதற்கு அதானி குழுமம் கடும் எதிர்ப்பு தெரிவித்து விளக்கம் அளித்ததன் அடிப்ப டையில், ‘கிரடிட்சைட்ஸ்’ சில திருத்தங்க ளைச் செய்தாலும், அதானி குழுமத்திற்கு தாங்கள் முன்பு அளித்த தர மதிப்பீட்டை மாற்ற முடியாது என உறுதியாக கூறி விட்டது. எனவே, தற்போதைய அடி, அதானி குழு மம் எதிர்பாராதது அல்ல. ஆனால், தங்களுக்கு எதிராக ஏதோ திடீ ரென சதி நடந்துள்ளதாக அதானி குழுமம் பழிபோட்டுக் கொண்டிருக்கிறது. முதலீட்டாளர்களை திருப்திப்படுத்து வதற்காக, ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ எழுப்பிய 89 கேள்விகளுக்கும் பொதுவெளியில் பதிலளித்துள்ளது.
89 கேள்விகளில் 21 கேள்விகளுக்குப் பொது வெளியீடாக வந்துள்ள 2015 அதானி போர்ட்போலியோ பிரசன்டேசன் அறிக்கை யில் பதில் அளிக்கப்பட்டு உள்ளது. ஹிண் டன்பர்க் செய்த கணக்கியல் அல்லது மோசடி குறித்த குற்றச்சாட்டுகள் உண்மை யற்றது. ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ நிறுவனம் எங்களைத் தொடர்பு கொள்ளவோ அல்லது உண்மை சரிபார்க்கவோ எந்த முயற்சியும் செய்யாமல், ஜனவரி 24, 2023 அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது அதிர்ச்சி யளிக்கிறது. அதானி குழுமத்திற்குத் தீங்கி ழைக்கும் நோக்கம் கொண்டது. ஒன்றை விட்டு ஒன்றைக் காட்டும் தவறான தக வல்களைக் கொண்டது என்று அதானி குழு மத்தின் தலைமை நிதி அதிகாரி ஜுகே ஷிந்தர் சிங் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அதானி குழுமம் தொடர் பான விசாரணைக்கு ஹிண்டன்பர்க் அறிக் கையை பயன்படுத்த, பங்குச்சந்தை ஒழுங் காற்று வாரியமான ‘செபி’ (SEBI) முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. அதானி குழுமத்திடம் சில ஆவ ணங்களை செபி கேட்டுள்ளதாகவும் கூறப் படுகிறது.