states

மனித மாண்புக்கு விரோதமான சாதியை கைவிடுங்கள்!

சென்னை, ஜன. 5- அறிவுக்கும் மனிதமாண்புக்கும் விரோதமான சாதியை கைவிடுங்கள் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 4ஆவது மாநில மாநாடு சென்னை மாதவரத்தில் தோழர்கள் கே.வரதராசன், பி.எஸ்.கிருஷ்ணன் மற்றும் ஜார்ஜ் பிளாய்ட் நினைவரங்கில் வியாழனன்று (ஜன. 5) நடைபெற்றது. மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு தலைமை தாங்கினார். வரவேற்புக்குழு செயலாளர் வி.ஜானகிராமன் வரவேற்றார். மாநில செயலாளர் எம்.பாலசுப்பிரமணியம் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட அபிராமி உள்ளிட்டோர் மாநாட்டை துவக்கி வைத்து பேசுகையில், அன்புக்கும் பெரும் மதிப்புக்கும் உரித்தான தமிழ்ச் சமூகத்துக்கு எங்களின் நம்பிக்கையுடன் கூடிய வேண்டுகோள். நாங்கள் சாதிக் கொடுமைக்கு எங்கள் குடும்ப உறவுகளை பறிகொடுத்தவர்கள். அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது என்கிற ஒளவையின் மொழி எவ்வளவு உன்னதமானது. இப்படி அரிதாய்ப் பிறந்த எங்கள் குடும்பத்தில் ஒருவரின் உயிரை சாதி பறித்துக்கொண்டது. எங்கள் குடும்பத்தாருக்கு ஏற்பட்ட இந்தக் கொடுந் துயரம் எவருக்கும் நேரக்கூடாது. உணர்ச்சிகரமான இந்தத் தருணத்தில் அரசமைப்புச் சட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பில் இருக்கிற ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுக்கு எமது வேண்டுகோள். தேசம் விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் கடந்தபின்பும் இன்னும் சாதியும் அதன் கொடுமைகளும் நீடிப்பது அரசுகளுக்கு விடப்படுகிற பகிரங்கமான சவால் அல்லவா?

ஏதாவது செய்யுங்கள் 

சட்டரீதியாகவும் பாடத்திட்டத்தின் வழியாகவும் சாதியை ஒழிப்பதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொள்ளுங்கள் என்று வலியுறுத்துகிறோம். மக்களை வழிநடத்துகிற பொறுப்பில் இருக்கிற அரசியல், சமூக, பண்பாட்டு இயக்கங்களுக்கும் மிகுந்த உரிமையுடன் கூடிய எங்களது கோரிக்கை ஒன்றுதான், சாதியை ஒழிப்பதற்கு ஏதாவது செய்யுங்கள் என்பதுதான்.

வளர்ச்சிக்கு தடை சாதி 

புவிப்பந்தில் எங்கும் காணமுடியாத வர்ணாசிரம சாதி முறையை இந்திய சமூகம் கொண்டுள்ளது. துளி அளவும் அறிவியல் அடிப்படை அற்றது சாதி முறை. மிகக் கொடூரமான ஒடுக்குமுறையின் வடிவம் இந்த சாதி முறை. அறிவுக்கும் மனித மாண்புக்கும் சற்றும் பொருந்தாத இந்த சாதி முறையை கட்டிக் காத்துக் கொண்டிருக்கிற சாதியவாதிகளே, சாதிய இயக்கங்களே உங்களுக்கு, சாதிக்கு உயிர்களை பறிகொடுத்த எங்களின் வேண்டுகோள், எப்போது கைவிடுவீர்கள்? சாதி இந்திய சமூகத்தின் வளர்ச்சிக்கு மிகப் பெரும் தடை என்பதை எப்போது உணர்வீர்கள்? எங்களைப் போன்று சாதியால் பாதிப்படைந்தவர்களின் கரம்பிடித்து போராடுகிற தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 4ஆவது மாநில மாநாட்டை நாங்கள் துவக்கிவைக்கிறோம். தீண்டாமை ஒழிப்பு முன்னணியுடன்  ஒரு பிரிக்க முடியாத பந்தம் எங்களுக்கு இருக்கிறது என்கிற உரிமையோடு இந்த மாநில மாநாட்டை துவக்கி வைக்கின்றோம் என்று கூறினர்.'

அறிக்கை தாக்கல் 

பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ்  கள செயல்பாட்டு அறிக்கையையும், பொருளாளர் இ.மோகனா வரவு,செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். கேரள தேவசம் போர்டு, ஆதிதிராவிடம் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் செயல்பாடுகள் குறித்தும், தலித் அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்தும், சாதி ஒழிப்பின் அவசியம் குறித்தும் விளக்கிப் பேசினார்.

வாழ்த்துரை

மூ.வீரபாண்டியன் (ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம்), திருவள்ளுவன் (தமிழ்ப் புலிகள் கட்சி), வீரமணி (சாதி ஒழிப்பு முன்னணி), வை.தேவதாசு (தியாகி இம்மானுவேல் பேரவை), கே.சென்னியப்பன் (ஜெகஜீவன்ராம் மக்கள் இயக்கம்), எம்.பி.செங்கோட்டையன் (தலித் விடுதலைகள் கட்சி), ச.கருப்பையா (தலித் விடுதலை இயக்கம்), கே.சிவாஜி (தலித் மண்ணுரிமை கூட்டமைப்பு), டி.ஜி.சம்பத் (பன்னியாண்டிகள் சங்கம்) ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநாட்டை நிறைவு செய்து சிறப்பு தலைவர் பி.சம்பத் பேசினார். வரவேற்புக்குழு பொருளாளர் வி.ஆனந்தன் நன்றி கூறினார்.
 

தீர்மானங்கள்

தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை உறுதியாக அமல்படுத்த வேண்டும், மனிதக் கழிவை மனிதன் அகற்றும் கொடுமைக்கு முடிவு கட்ட பஞ்சமி நிலமீட்பை உறுதிப்படுத்த வேண்டும், சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் இயற்ற வேண்டும், அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த வேண்டும், எஸ்சி, எஸ்டி துணை திட்டங்களை முறையாக அமலாக்க வேண்டும்,  இட ஒதுக்கீடு விதி மீறல்களை முறைப்படுத்தவும் தனியார் துறையிலும் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும், அனைவருக்கும் ஒரே  மயானத்தை  உறுதிப்படுத்த வேண்டும், பீமா கொரேகான் பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும், கேரள மாநில அரசின் சமூக நீதி நடவடிக்கைகளை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும், தலித் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தாக்குதல்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பட்டியல் சாதி மற்றும் பழங்குடி உள்ளாட்சித் தலைவர்கள் எதிர்கொள்ளும் சாதிய பாரபட்சங்களை களைய வேண்டும், தலித் கிறிஸ்தவர்களுக்கு பட்டியல் சாதி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், சமூக நீதியை பறிக்கும் வகையில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு சிறப்பு பணப்பயன்களை வழங்கி உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.