சென்னை,ஜூன் 30- மாநகராட்சி பொது சுகாதாரப் பணிகளை தனியாருக்கு கொடுக்கும் முடிவினை திரும்பப்பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் ஜூன் 30 அன்று சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டாவது தீர்மானம் பின்வருமாறு: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு பதிலாக இப்பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் வேகமாக நடைபெறுகிறது.
ஈரோடு மாநகராட்சியில் பொது சுகாதாரப்பணியினை தனியாருக்கு கொடுப்பதற்கு டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதை எதிர்த்து கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். ஏற்கனவே பணியில் உள்ள தொழிலாளர்கள் பல ஆண்டு காலமாக தற்காலிகமாக பணியாற்றி வருகிறார்கள். தனியாரிடம் ஒப்படைக்கப்படுவதால் தொழிலாளர் எண்ணிக்கை குறைப்பு, ஊதியம் குறைக்கப்படுவது போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்பதாலும், பொது சுகாதாரம் என்பது நிரந்தரமான பணி என்பதை கவனத்தில் கொண்டு பொது சுகாதாரப் பணிகளை மாநகராட்சியே நேரடியாக மேற்கொள்வதுதான் பொருத்தமானதாக இருக்கும். எனவே, ஈரோடு மாநகராட்சியில் பொது சுகாதாரப் பணியினை தனியாருக்கு கொடுக்கும் முடிவினை திரும்பப் பெற வேண்டுமென்றும், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசி சுமூகமான முறையில் தீர்வு காண தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.