பிரிஜ் பூஷன் கைதாகும் வரை எங்கள் போராட்டம் தொடரும்: மல்யுத்த வீராங்கனைகள் திட்டவட்டம்
புதுதில்லி, ஏப்.29- பிரிஜ் பூஷன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருப்பதை வரவேற்கிறோம். எனினும், அவர் கைது செய்யப்படும்வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று மல்யுத்த வீராங்கனைகள் திட்டவட்டமாகக் கூறி யுள்ளார்கள். “நாங்கள் உச்சநீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். எங்கள் வெற்றி யின் முதல்படி இது. ஆயினும் எங்கள் போராட் டம் முடிவடைந்துவிடவில்லை, அது தொட ரும்,” என்று சாக்ஷி மாலிக் தெரிவித்தார். “நாங்கள் தில்லிக் காவல்துறையை நம்பத் தயாராயில்லை. எங்கள் புகார்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கே அதற்கு ஆறு நாட்கள் ஆகியிருக்கிறது,” என்று வினேஷ் போகத் கூறினார். “இப்போது பெயரளவில் பதிவு செய்யப் பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை மீது அவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று பார்ப்போம். அந்த நபர் எம்.பி. பத வியிலிருந்தும், உலக மல்யுத்தவீரர்கள் சம்மேள னத்தின் தலைவர் பொறுப்பிலிருந்தும், இவ்வாறு அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும். அவ்வாறு அவர் நீக்கப் படாவிட்டால், ஒரு நியாயமான புலன்விசா ரணை என்பது சாத்தியமில்லை. நாங்கள் நீதிக் காக உச்சநீதிமன்றத்தை மட்டுமே நம்பி யிருக்கிறோம்” என்றும் அவர் கூறினார். (ந.நி.)
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைவு
புதுதில்லி, ஏப்.29- இந்தியாவின் அந்நியச் செலா வணி கையிருப்பு அளவு, ஏப்ரல் 21 நில வரப்படி, 216 கோடி டாலர் குறைந்து 58,425 கோடி டாலரை எட்டியதாக மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதற்கு முந்தைய 2 வாரங்களில் அந்நி யச் செலாவணி கையிருப்பு 800 கோடி டாலர் அதிகரித்து 58,641 கோடி டால ராக இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்நியச் செலாவணியில் முக்கிய அங்கமாக இருக்கும் அந்நிய நாண யச் சொத்துகள் மதிப்பும் 214 கோடி டாலர் குறைந்து 51,449 கோடி டாலரை எட்டியது என்று ரிசர்வ் வங்கி வாரந் தோறும் வெளியிடும் புள்ளியியல் தக வலில் தெரிவிக்கப் பட்டுள்ளது. முன்னதாக, 2021 அக்டோபரில், நாட்டின் அந்நியச் செலாவணி கை யிருப்பு புதிய உச்சமாக 64500 கோடி டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அரசுக்கு சொந்தமான இடம் விற்பனை: 12 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு
திருவாரூர், ஏப்.29- திருவாரூரில் அரசுக்கு சொந்தமான இடத்தினை ஒரு கோடியே 83 லட்சத்திற்கு விற்பனை செய்த அரசு அலுவலர்கள் உட்பட 12 பேர் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருவாரூர்-நாகை தேசிய நெடுஞ்சாலை இரு வழி சாலையாக மாற்றி அமைக்கும் பணிக்காக நிலம் எடுக்கும் பணி கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை நடைபெற்றது. இதனையொட்டி தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மூலம் 2015-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட நாளிதழ் அறிவிப்பில், திருவாரூர் அருகே அடியக்கமங்கலத்தில் அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு இடம் 30 ஆயிரம் சதுர அடியும் அடங்கும். இந்நிலையில் இந்த 30 ஆயிரம் சதுர அடியை ஆண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த மறைந்த ஞானசேகரன் குடும்பத்திற்கு 2017-ஆம் ஆண்டில் பட்டா வழங்கப்பட்டது. பட்டா வழங்கப்பட்ட இடத்தை மீண்டும் தேசிய நெடுஞ்சாலை பணிக்காக 2019-ஆம் ஆண்டு ஒரு கோடியே 83 லட்சத்து 86 ஆயிரத்திற்கு அரசு தரப்பிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு புறம்போக்கு நிலம் என்று சர்வே நம்பர் குறிப்பிட்டு அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர் வேண்டுமென்று ஆதாயம் அடையும் வகையில், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டு பின்னர்
அரசுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, திருவாரூர் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கிடைத்த தகவலின் பேரில், அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக கூறி வருவாய்த் துறையை சேர்ந்த (நிலம்)மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, 2019 ஆம் ஆண்டில் திருவாரூர் மாவட்ட வருவாய் ஆய்வாளர் பணிபுரிந்து தற்போது விழுப்புரம் அரசு சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குநராக பணியாற்றும் முத்து மீனாட்சி, கிராம நிர்வாக அலுவலர் துர்காதேவி, கிராம உதவியாளர் கார்த்திக், வட்டாட்சியர் இராஜன் பாபு ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றிய நிலையில், மாவட்ட வருவாய் ஆய்வாளர்கள் மணிமேகலை, முத்து மீனாட்சி, கிராம நிர்வாக அலுவலர் துர்கா ராணி, கிராம உதவியாளர் கார்த்திக் ஆகிய 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், அரசை ஏமாற்றி பொய்யான ஆவணம் கொண்டு, அரசு தொகையினை பெற்றதாக ஞானசேகரன் மகன்களான சுகுமார், குமார், சிவகுமார், சதீஷ்குமார், வினோத்குமார், மகள் சுகுமாரி மற்றும் ஞானசேகரன் மகனும் கிராம உதவியாளருமான கார்த்திக் மனைவி விஜயலட்சுமி உட்பட 8 பேர் என 12 பேர்கள் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
சிசோடியாவிற்கான காவல் மே 8 வரை நீட்டிப்பு!
மதுபானக் கொள்கை தொடர்பான ஊழல் வழக்கில், தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை, கடந்த பிப்ரவரி 26 அன்று இரவு சிபிஐ கைது செய்தது. அவர் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இதே குற்றச் சாட்டிற்காக அமலாக்கத்துறையும் கடந்த மார்ச் 9 அன்று சிசோடியா மீது வழக்கு பதிவுசெய்து அவரைக் கைது செய்தது. தொடர்ந்து அவரை தங்களின் கட்டுப்பாட்டில் எடுத்து விசா ரணையும் நடத்தி வந்தது. இந்த விசாரணை முடிவில் சிசோ டியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை மே 8 வரை காவலில் வைக்க, தில்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பைஜூஸ் சி.இ.ஓ. வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை!
பைஜூஸ் என்பது ஆன்லைன் கார்ப்பரேட் கல்வி நிறுவனம் ஆகும். 2011 முதல் 2023 ஆண்டு வரை சுமார் 28 ஆயிரம் கோடி ரூபாய் அந்நிய முதலீடுகளை பெற்றிருக்கும் இந்த நிறுவனம் அந்நிய செலாவணி மோசடி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த அந்நிய செலாவணி மோசடி தொடர்பாக, பெங்களூருவில் உள்ள பைஜூஸ் நிறு வனத்தின் தலைமை செயல் அதிகாரி ரவீந்திரனுக்கு சொந்த மான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அம்பேத்கர், சாவர்க்கர் வரிசையில் நானும் உள்ளேன்: மோடி பேச்சு
“காங்கிரஸ் என்னை மீண்டும் அவமானப்படுத்தி பேசி வருகிறது. ஒவ்வொரு முறையும் காங்கிரஸ் என்னை அவ மானப்படுத்தும் போது அதற்கு தண்டனை கிடைக்கும். காங்கி ரஸ் என்னை 91 முறை அவமானப்படுத்தி உள்ளது. நாட்டின் ஜாம்பவான்களைக் கூட காங்கிரஸ் விட்டுவைக்கவில்லை, அனைவரையும் துஷ்பிரயோகம் செய்து உள்ளது. பாபா சாகேப் அம்பேத்கர் ஜி, சாவர்க்கர் ஜி ஆகியோரை காங்கிரஸ் அவமதித்தது. இப்போது அவர்கள் அதையே என்னிடமும் செய்கிறார்கள். அதே வரிசையில் என்னை கருதியதில் நான் பெருமைப்படுகிறேன்” என்று பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசியுள்ளார்.
மக்களுக்காக விஷம் குடித்த நீலகண்டராம் மோடி: சவுகான்
“ஒரு வளம் நிறைந்த மற்றும் வலிமையான இந்தியாவை பிரத மர் மோடி கட்டமைத்து வருகிறார். காங்கிரஸ் கட்சியானது விஷக்குடம் ஆகி வருகிறது. அவர்கள் பிரதமர் மோடியை பற்றி நஞ்சை பரப்பி வருகின்றனர். பிரதமர் மோடி நீலகண்டர். அவர் நாட்டுக்காகவும், பொதுமக்களுக்காகவும் விஷம் குடித்துக் கொண்டிருக்கிறார்” என மத்தியப்பிரதேச மாநில பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பேசியுள்ளார். கடவுள் சிவபெரு மான், தேவ கணங்களைக் காப்பாற்றுவதற்காக, திருப்பாற்கட லில் வந்த விஷத்தை குடித்தார் என்பதும், இதனால் அவர் திரு நீலகண்டர் என்றும் புராணம் கூறுகிறது. அதுபோன்று பிரதமர் மோடியும் நீலகண்டர்தான் என்று சவுகான் ஜால்ரா அடித்துள்ளார்.
“சூடானில் இன்னும் 200 தமிழர்கள் சிக்கியுள்ளனர்” அமைச்சர் தகவல்
சென்னை,ஏப்.29- சூடானில் இன்னும் 200 தமிழர்கள் சிக்கி உள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார். சூடான் நாட்டில் தற் போது ராணுவம் மற்றும் உள்நாட்டு படையினருக்கு இடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான வர்கள் கொல்லப்பட்டுள்ள னர். இந்நிலையில், அங்கி ருந்து மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் வெளியேறி வருகின்றனர். தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள், அங்குள்ள இந்தியத் தூதர கம் மூலம் கண்டறியப்பட்டு, ‘ஆபரேஷன் காவிரி’ என்ற திட்டத்தின் கீழ், இந்தியா அழைத்து வரப்படுகின்ற னர். இந்நிலையில், சில நாட்க ளுக்கு முன்பு சூடானிலி ருந்து மீட்கப்பட்ட 9 தமிழர் கள் தாயகம் திரும்பினர். இதனைத் தொடர்ந்து சனிக் கிழமை(ஏப்.29) அதிகாலை யில் மேலும் 9 தமிழர்கள் சென்னை விமான நிலை யம் வந்தனர். இவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் விமான நிலையத்தில் வர வேற்றார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் மஸ்தான் செய்தியாளர்களிடம் கூறு கையில், “சூடான் நாட்டி லிருந்து சென்னை வந்தவர்க ளிடம் விசாரணை செய்த தில் இன்னும் 200 தமிழர்கள் உள்ளது தெரியவந்துள்ளது. அனைவரையும் பாது காப்பான முறையில் கொண்டு வர அரசு நட வடிக்கை எடுத்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். நமது தமிழ் சங்கம் மற்றும் தூதரகம் சார்பாக தமிழ்நாடு மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு, அரசு சார்பாக முழு போக்குவரத்து செலவும் வழங்கப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு சார்பாக, ஆப ரேஷன் காவேரி திட்டத்தின் கீழ் ஒட்டு மொத்த இந்தியர்க ளையும் பாதுகாப்பான முறையில் அழைத்து வரு கின்றனர் என்றும் அமைச்சர் கூறினார்.
பாவேந்தர் காண விரும்பிய தமிழகமாக எழுந்து நிற்கிறோம்!
சென்னை, ஏப்.29- “பாவேந்தர் காண விரும்பிய தமிழகமாக இன்று எழுந்துநிற்கிறோம்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். பாவேந்தர் பாரதிதாசனின் 133ஆவது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்! எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லையென்றால் இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்! தமிழொளியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும்!” எனத் தமிழ் வளரவும் தமிழர் உயரவும் உணர்ச்சியூட்டி முற்போக்காய்ப் பாப்புனைந்த புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பிறந்தநாள்! துறைதோறும் தமிழ் வளர்ச்சி, பெண்கல்விக்கான திட்டங்கள், பல மொழிபெயர்ப்புத் திட்டங்கள் எனப் பாவேந்தர் காண விரும்பிய தமிழ்நாடாக இன்று எழுந்துநிற்கிறோம்!” இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
வாங்காத பொருள்களுக்கு ரசீது: கூட்டுறவு பதிவாளர் எச்சரிக்கை
சென்னை,ஏப்.29- நியாய விலைக்கடைகளில் வாங்காத பொருள்க ளுக்கு ரசீது போட்டதாக புகார் வந்தால் விற்பனை யாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவு பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். ஒன்றிய, மாநில அரசுகள் வழங்கும் உணவு பொருள்கள் மானிய விலையில் நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கோடிக் கணக்கான குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் சில நியாய விலைகளில் ஊழியர்கள் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும், பொருள்கள் வாங்காமலேயே வாங்கியதாக குடும்ப அட்டைத்தாரர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வருவதாக புகார் எழுந்தது. இந்நிலையில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாய விலைக்கடைகளுக்கும் கூட்டுறவு சங்க பதிவாளர் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், நியாய விலைக்கடைகளில் வாங்காத பொருள்கள் வாங்கா மலேயே வாங்கியதாக குடும்ப அட்டைத் தாரர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தால் அந்த நியாய விலைக்கடையின் ஊழியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவு சங்க பதிவாளர் தெரிவித்துள்ளார்.
அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும், உயர்கல்வி வழிகாட்டுதல் குழு
சென்னை, ஏப்.29- 10 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் 11 ஆம் வகுப்பிற்கும், 12 ஆம் வகுப்பு முடிந்த மாணவர்கள் உயர்கல்விக்கும் செல்லவேண்டும் என்பது கல்வித் துறையின் நோக்கமாக உள்ளது. அதன் அடிப்படை யில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில், 10 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள்,11 ஆம் வகுப்பில் என்னென்ன பாடப் பிரிவுகள் இருக்கின்றன என்பதை தெரிந்துகொள்ளும் வகையிலும், அதேபோல, 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர்கல்வியில் என்னென்ன படிப்புகள் இருக்கின்றன என்பதை தெரிந்துகொள்ளும் வகையி லும் முக்கிய பாடப்பிரிவுகள் வாரியாக, வீடியோ வாரியாக பள்ளிக்கல்வித்துறை தயாரித்து வெளியிட்டி ருக்கிறது. அதுமட்டுமில்லாமல், அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் உயர்கல்வி வழிகாட்டுதல் குழு உருவாக்கப்படவேண்டுமென அறிவுறுத்தி யுள்ளது. அந்தந்த பள்ளி தலைமையாசிரியர் தலைமையில் 8 உறுப்பினர்களை கொண்டு குழு செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்தந்த பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வியில் என்னென்ன பாடப்பிரிவுகள் உள்ளது என்பதையும், எந்த பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்து படித்தால், பின்னாளில் என்ன வேலைக்கு செல்லமுடி யும் என்பது பற்றிய விரிவான தகவல்களை எடுத் துரைக்கவேண்டும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி யிருக்கிறது. இதற்கான சுற்றறிக்கை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ரூ.40 லட்சம் மோசடி; கணவன், மனைவி கைது
சென்னை,ஏப்.29- சென்னை ஆண்டாள் நகரைச் சேர்ந்தவர் சலோமி பெபினா மற்றும் அவரது கணவர் அகஸ்டின் ஆகியோர் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு தேடும் இளைஞர்களிடம் கப்பலில் அதிக சம்பளத்திற்கு வேலை வாங்கித் தருகிறோம் என்று விளம்பரம் செய்து தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 16க்கும் மேற்பட்டவர்களிடம் கமிஷனாக ரூ. 40 லட்சம் வரை பெற்றுள்ளனர். அதில் குறிப்பிட்ட சில நபர்களை மட்டும் ஈரான் நாட்டிற்கு குறைவான சம்பளத்திற்கு வேலைக்கு அனுப்பியுள்ளனர். மற்றவர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றியுள்ளனர். இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் குற்றப்பிரிவு காவல் துறை யினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட னர். விசாரணையைத் தொடர்ந்து வெளிநாட்டில் கப்பலில் அதிக சம்பளத்திற்கு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட சென்னையைச் சேர்ந்த அகஸ்டின் மற்றும் சலோமி பெபினா ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பாதிக்கப் பட்டவர்களுக்கு விரைவில் பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.
காவிரியில் கழிவு நீர்: கர்நாடக அரசுக்கு தலைமைச் செயலர் கடிதம்
சென்னை,ஏப்.29- காவிரி ஆற்றில் பெங்களூருவில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என கர்நாடக தலைமை செயலா ளருக்கு தமிழ்நாடு தலைமைச் செய லாளர் வெ.இறையன்பு கடிதம் எழுதி யுள்ளார். அதில், காவிரி ஆற்றில் நடப்பு ஆண்டு 2022-23 இல் நீர் வழங்கும் காலத் தில், இதுவரை 658 டி.எம்.சி நீர் தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் நிர்ணயித்த நீரின் அளவைக் காட்டிலும் இந்த ஆண்டு 484 டி.எம்.சி கூடுதல் நீர் வழங்கப்பட்டுள்ளது. மேலும், நீர் வழங்குவதற்கான தவணை காலம் முடிவதற்கு மே வரை அவகாசம் உள்ளது. இந்நிலையில், பெங்களூரு நகரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளி யேற்றப்படும் கழிவு நீர், நேரடியாக காவிரி ஆற்றில் ஆங்காங்கே பச்சை நிறத்துடன், சாக்கடை நீரும் கலந்து ஓடுகிறது. இவ்வாறு முறைப்படி கிடைக்கும் நீரில் பெரும் பகுதி கழிவு நீராகவே உள்ளது. எனவே, காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுப்ப தற்கு தேவையானநடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கி றார்.
அடக்குமுறைக்கு மத்தியில் மே தினக் கொண்டாட்டம்
டெல் அவிவ், ஏப்.29- இஸ்ரேலில் காவல்துறையின் கடும் அடக்குமுறைகளுக்கு மத்தியில் மே தினக் கொண்டாட்டங்களுக்கு பெருந்திரளாக வருமாறு மக்களுக்கு இஸ்ரேல் கம்யூ னிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்திருக்கிறது. இது குறித்து இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆக்கிரமிப்புக்கு, பாசிசத்திற்கு, வர்க்க ரீதியான ஒடுக்குமுறை மற்றும் சுரண்டல் ஆகியவற்றிற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ வேண்டும். பாலஸ்தீனத்தைக் காலனி நாடாக மாற்றுவதைத் துரிதப் படுத்த வேண்டும் என்றும், நீதித்துறையை பலவீனப்படுத்த வேண்டும் என்றும் முனைப்புடன் வலதுசாரி அரசு இருக்கை யில் அவற்றிற்கு எதிரான போராட்டம் அவசியமாகிறது” என்று கூறியிருக்கிறது. இஸ்ரேலின் நாசரேத் நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்குள் புகுந்த காவல்துறையினர் கொடிகளை கையகப்படுத்தினர். மேலும் கட்சியின் நகர்ச் செயலாளர் கைது செய்யப்பட்டார். இந்த அலுவலகத்தில் இஸ்ரேல் கொடி யோடு, பாலஸ்தீனக் கொடியும் ஏற்றப்பட்டி ருந்தது. பாலஸ்தீனக் கொடியை அகற்ற வேண்டும் என்று காவல்துறையினர் மிரட்டினார்கள். ஆனால், அதற்குக் கம்யூனிஸ்ட் கட்சி மறுத்துவிட்டது. இஸ்ரேலில் இயங்கி வரும் கட்சிகளில், கம்யூனிஸ்ட் கட்சியில் மட்டும்தான் யூதர்கள் மற்றும் அரேபியர்கள் ஆகிய இரு பிரிவினரும் உறுப்பினர்களாக இருக்கி றார்கள். இரு பிரிவினரும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அந்நாட்டு நாடாளுமன்றத்தி லும் உறுப்பினர்களாக அமர்ந்துள்ளனர். கைது செய்வதற்கான ஆணை எதுவும் இல்லாமல், சுவரேறிக் குதித்து உள்ளே வந்த காவல்துறையினர், அனைத்துக் கொடிகளையும் கைப்பற்றி எடுத்துச் சென்றனர் என்று கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.