states

img

தொழில்நுட்ப கதிர்

வாட்ஸ்அப்பில் ஸ்பேம் எண்களை பிளாக் செய்ய புதிய வசதி!

வாட்ஸ்அப் செயலியில் ஸ்பேம் (Spam) எண்களை லாக் ஸ்கிரீனில் (Lock screen) இருந்தே பிளாக் (block) செய்யும் புதிய வசதி வழங்கப்பட்டுள்ளது. சைபர் குற்றவாளிகள், மால்வேர் சேர்க்கப்பட்ட மெசேஜ்கள் மூலம்  தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி விவரங்களை திருடி, அதன் மூலம் பணம் பறிக்கின்றனர். ஹேக்கர்கள், பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திருட வாட்ஸ்அப்பையும் பயன்படுத்துகின்றனர். இது போன்ற ஆன்லைன் மோசடிகளை தடுக்கும் வகையில், தெரியாத எண்களில் இருந்து வரும் ஆடியோ/வீடியோ அழைப்புகளை முடக்கும் வசதியை ஏற்கனவே வாட்ஸ்அப்பில் வழங்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து, தற்போது பயனர்கள் ஸ்மார்ட்போனை அன்லாக் செய்யாமல், நேரடியாக லாக் ஸ்கிரீனில் இருந்தபடி ஸ்பேம் மெசேஜ்களை பிளாக் செய்யும் புதிய வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், ஸ்பேம் மெசேஜ்களை ரிபோர்ட் செய்யும் வசதியும் வழங்கி இருக்கிறது.  இந்த வசதியை பயன்படுத்த முதலில், வாட்ஸ்அப்பின் புதிய வெர்ஷனை அப்டேட் செய்ய வேண்டும். சந்தேகத்திற்குரிய அல்லது ஸ்பேம் மெசேஜ்கள் வந்தால், லாக் ஸ்கிரீனில் காண்பிக்கும் நோட்டிஃபிகேஷனை நீண்ட நேரம் அழுத்தினால், Reply மற்றும் Block ஆகிய ஆப்ஷன்களை காண்பிக்கும். இதில் பிளாக் ஆப்ஷனை க்ளிக் செய்து ஸ்பேம் எண்களை பிளாக் செய்யலாம்.

உரையாடல்களை நினைவில் வைத்துக் கொள்ளும் சாட்ஜிபிடி!

செயற்கை நுண்ணறிவு தளமான சாட்ஜிபிடி-யின் சாட்பாட் (Chatbot), பயனர்கள் உடனான உரையாடல்களை நினை வில் வைத்துக் கொள்ளும் திறனை ஓபன் ஏஐ நிறுவனம் சோதனை செய்து வருவதாக தெரிவித்துள்ளது.   கடந்த 2022-ஆம் ஆண்டு சாட் ஜிபிடி என்ற  செயற்கை நுண்ணறிவு தளம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் சாட்பாட் உடன் பயனர் கள் உரையாடி தகவல் பெற முடியும். கட்டுரை எழுதுவது, கவிதை எழுதுவது, கோடிங்  எழுதுவது உள்ளிட்ட எண்ணற்ற பணிகளை இந்த பாட் செய்யும். இந்த நிலையில், பயனர்கள்  கேட்கின்ற கேள்விகள் மற்றும் உரையாடலை நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில்  சாட்ஜிபிடி-யின் சாட்பாட்டின் திறன் மேம்படுத் தப்பட்டுள்ளது. இந்த அம்சம் தற்போது சோதனை முறையில் உள்ளது. விரைவில் அனைத்து பயனர்களுக்கும் இந்த அம்சம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சாட்ஜிபிடி நினைவில் வைத்துக் கொள்ளும் உரையாடலை தேர்ந்தெடுக்கும் வசதியும் பயனர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீத்தேன் வாயு கசியும் இடங்களின் வரைபடத்தை உருவாக்கும் கூகுள்!

உலகம் முழுவதும் மீத்தேன் வாயு கசிவு ஏற்படும் இடங்களின் வரை படத்தை இணைத்து வெளியிட கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போது புவி வெப்ப நிலை அதிகரித்து  வருவதற்கு பெருமளவு மீத்தேன் வாயு காரணமாக இருக்கிறது. வேளாண்மை, எண்ணெய், எரிவாயு உற்பத்தியின் போது கசிவு, குப்பை மேடுகள் போன்றவை மீத்தேன்  வாயு உற்பத்திக்கு காரணமாக அமைகின்றன.  இந்த நிலையில், உலகம் முழுவதும் மீத்தேன்  வாயு கசிவு ஏற்படும் இடங்களின் வரை படத்தை இணைத்து வெளியிட கூகுள்  நிறுவனம் திட்டமிட்டுள்ளது. செயற்கைக் கோள் தரவுகள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் போன்றவற்றை பயன்படுத்தி  மீத்தேன் வாயு கசிவை கண்டறிய உள்ளது. இதற்கென, வரும் மார்ச் மாதத்தில் ‘மீத்தேன்சாட்’ எனும் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த செயற்கைக்கோள் பூமியை ஒரு நாளைக்கு 15 முறை சுற்றிவர உள்ளது என்றும், இதன் மூலம் மீத்தேன் வாயு கசிவு  ஏற்படும் இடங்களின் வரைபடத்தை உருவாக்கி இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட திட்டமிட்டுள்ளது.