states

அங்கோலாவை விட கீழான நிலையில் இந்தியப் பொருளாதாரம்

புதுதில்லி, ஏப்.30- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் தலைநகர் புதுதில்லியில் ஏப்ரல் 27-29 தேதிகளில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ள அம்சங்கள்:

*    2022 நிதியாண்டிற்குப் பிறகும், 2023இலும் இந்தியா தன்னுடைய பொருளாதாரத்தில் 350 பில்லியன் அமெரிக்க டாலர் அதிகரித்திருக்கிறது. ஆனால் அதே சமயத்தில் அமெரிக்கா 1390 பில்லியன் அமெரிக்க டாலர்களும், சீனம் 1274 பில்லியன் அமெரிக்க டாலர்களும் அதிகரித்துள்ளது என்பதுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் எந்த அளவிற்கு மிக மோசமான நிலை இருக்கிறது என்பது தெளிவாகும்.  

*    இந்தியா, இதர வளர்ந்த பொருளாதார நாடுகளுடன் ஒப்பிடுகையில் தனிநபர் வருமானத்தில் மிகவும் கீழ்நிலையில் இருக்கிறது. தனிநபர் வருமானத்தில் அமெரிக்கா நம்மைவிட 31 மடங்கு அதிகமாகவும், சீனம் 5 மடங்கு அதிகமாகவும் இருக்கின்றன. பிரேசில் 4 மடங்கும், பிரிட்டன் 18 மடங்கும், ஜெர்மனி 20 மடங்கும் இதே போன்று அதிகமாக இருக்கின்றன. அங்கோலா, ஐவரி கோஸ்ட் போன்ற நாடுகளைக்காட்டிலும் கீழான நிலையிலேயே நம் தனிநபர் வருமானம் இருக்கிறது.

*    தொழில்துறையில் தேக்க நிலை நீடிக்கிறது. 8 பிரதான துறைகளில் வளர்ச்சி என்பது பிப்ரவரியில் 7.2 விழுக்காடாக இருந்ததிலிருந்து, மார்ச் மாதத்தில் 3.6 விழுக்காட்டிற்கு, அதாவது,  சரிபாதியாக வீழ்ந்திருக்கிறது.

*    இவற்றின் விளைவாக, வேலையின்மை விகிதம் தொடர்ந்து சுமார் 8 விழுக்காடு வேகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. வேலையில் உள்ளோர் எண்ணிக்கை 2020 ஜனவரியில், கொரோனா பெருந்தொற்றுக் காலத்திற்கு முன்பிருந்த அதே 41.1 கோடி என்ற அளவிலும், 2023 ஜனவரியில் 40.9 கோடி என்ற நிலையிலும் நீடிக்கிறது.

*    கிராமப்புற உழைப்பாளிகளின் ஊதியம் கடந்த எட்டு ஆண்டு காலமாக தேக்க நிலையிலேயே இருந்து வருகிறது.  

*    மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் மிகவும் அவசியமாகத் தேவைப்படும் இந்த சமயத்தில் அதன் பட்ஜெட் ஒதுக்கீடுகள் மூன்றில் ஒரு பங்கு அளவிற்கு வெட்டப்பட்டிருக்கிறது. வேலை செய்தவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய ஊதிய நிலுவைத் தொகை பல மாதங்களாக தரப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது.

*    இத்தகைய சூழ்நிலைகளில், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் செலவினங்களில் ஒன்றிய அரசாங்கம் பொது செலவினங்களை அதிகப்படுத்துவதன் மூலம், வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் அதன்மூலம் மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்து, பொருளாதாரத்தில் தேவையைப் பெருக்கிட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு வலியுறுத்தியுள்ளது.