states

கொள்ளை லாபம் அடிக்கும் தனியார் காப்பீட்டு நிறுவனத்தை தடை செய்க!

நாகப்பட்டினம், நவ.11- 2021- 22 ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகை வழங்கியதில் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கொள்ளை லாபம் பார்த்துள்ளன. நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பரவலாக விவசாயம் செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதிலும் 236 வருவாய் கிராமங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான கிராமங்கள் விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இயற்கை பேரிடர் காரணமாக செய்து வந்த வேளாண்மைக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வது வழக்கம். அதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் விவசாயம் செய்தவர்கள் பயிர் காப்பீடு செய்திருந்தனர். இந்த பயிர் காப்பீடு செய்யும் பிரீமியத்தை தனியார் நிறுவனங்கள் இப்கோ மற்றும் டோக்கியோ ஆகிய நிறுவனங்கள் வசூலித்து வந்தன. செய்யப்பட்ட பயிர் காப்பீட்டிற்கு இழப்பீடு தொகை வழங்காமல் ஓராண்டு காலமாக அந்நிறுவனங்கள் இழுத்தடித்து வந்தன.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களை திரட்டி அனைத்து தரப்பு பயிர்களுக்கும் அனைத்து தரப்பினருக்கும் சமமாக இன்சூரன்ஸ் தொகை வழங்க வேண்டும் என்று போராடியது.  

பாதிக்கப்பட்ட ஊராட்சிகளை கவனமாக கணக்கெடுத்து அதன்படி நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது. விவசாயிகளிடமிருந்து பெற்ற பிரீமிய தொகை மற்றும் ஒன்றிய அரசு-மாநில அரசின் பங்களிப்பின்கீழ் வரும் பங்கீட்டு தொகைகளையும் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் அந்நிய நிறுவனங்களில் முதலீடு செய்து கொள்ளை லாபம் அடிப்பதாக தகவல் வருகிறது. இந்தப் பின்னணியில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 236 ஊராட்சிகளில் 28 ஊராட்சிகளை தேர்ந்தெடுத்து அவற்றிற்கு பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்குவதாக அறிவித்தது. இது காப்பீடு செய்த விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும்.

கீழையூர் ஒன்றியத்தில் 4 ஊராட்சிகளும், கீழ்வேளூர் ஒன்றியத்தில் 4 ஊராட்சிகளும், நாகை ஒன்றியத்தில் 6 ஊராட்சிகளும், தலைஞாயிறு ஒன்றியத்தில் 4 ஊராட்சிகளும், திருமருகல் ஒன்றியத்தில் 3 ஊராட்சிகளும், வேதாரண்யம் ஒன்றியத்தில் 7 ஊராட்சிகளும் என மொத்தமாக 28 ஊராட்சிகளுக்கு இழப்பீட்டுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடமிருந்து பிரீமியமாக பெற்ற தொகையை தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் கபளீகரம் செய்து விவசாயிகளுக்கு கிடைக்கக்கூடிய நன்மையை சுரண்டி கொழுக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட 28 ஊராட்சிகளில், 50 சதவீதத்திற்கும் மேலான பாதிப்பை ஒரே ஒரு ஊராட்சியும், 40 சதவீதத்திற்கு மேலான பாதிப்பை 5 ஊராட்சியும், 30 சதவீதத்திற்கு மேல்  5 ஊராட்சியும், 20 சதவீதத்திற்கு மேல் 5 ஊராட்சியும், 10 சதவீதத்திற்கு மேல் 7 ஊராட்சியும், 10 சதவீதத்திற்கு கீழ் 5 ஊராட்சிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன என வகைப்படுத்தி இழப்பீட்டுத் தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா மையங்களிலும் விவசாயிகளை ஒன்று திரட்டி அனைத்து தரப்பிற்கும் பாரபட்சமின்றி இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என கோரி போராட்டம் நடத்தியது. 40 அல்லது 50 சதவீதத்திற்கு மேலான இழப்பீட்டுத் தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ள ஊராட்சிகள், சுற்றுலாத்தலங்கள், இறால் பண்ணைகள் அதிகமாக உள்ள ஊராட்சிகள் ஆகும். குறிப்பாக வேளாங்கண்ணி ஊராட்சிக்கு 40 சதவீதத்திற்கு மேலான இழப்பீட்டுத் தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வேளாங்கண்ணி ஊராட்சியில் விவசாய நிலங்கள் மிகவும் குறைவு. இது சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.

அதிகமான விவசாய நிலப்பரப்புகளை கொண்ட ஊராட்சிகளுக்கு குறைந்த சதவீதத்தில் இழப்பீடு தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இப்போ, டோக்கியோ போன்ற தனியார் காப்பீட்டு நிறுவனங்களை தடை செய்ய வேண்டும். பயிர் காப்பீடு செய்வதை அரசு நிறுவனம் ஏற்று நடத்த வேண்டும். கடந்த ஆண்டு நெல் அறுவடையின்போது பெய்த கனமழையால் விவசாயிகள் பேரிழப்பை சந்தித்தனர். அவர்களுக்கு உரிய காப்பீட்டு தொகை வழங்க வேண்டும். அரசு காப்பீட்டு நிறுவனங்கள் கொடுத்த இழப்பீடு தொகையை தனியார் நிறுவனங்கள் தருவதில்லை. அவர்கள் லாபம் ஈட்டவே விவசாயிகளை வஞ்சித்துள்ளனர். இதற்கு ஒன்றிய அரசு துணை போகிறது. 2022-2023 பயிர் காப்பீட்டை அரசு காப்பீட்டு நிறுவனங்களே காப்பீடு செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் இந்நேரத்தில், சென்ற ஆண்டு விவசாயிகள் செய்த பயிர் காப்பீட்டிற்கான இழப்பீட்டுத் தொகையை அரசு கவனத்தில் கொண்டு வழங்கினால் இந்த மழைக்காலத்தை விவசாயிகள் கவலையின்றி எதிர்கொள்வர்.