மும்பை, நவ. 17 - இந்தியச் சினிமா, நாடகங்களில் நடிப்பதற்கு பாகிஸ்தான் நடிகர்களை ஒப்பந்தம் செய்யக் கூடாது என்று ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது. இதுதொடர்பாக, நவ நிர்மாண் சேனா-வின் சினிமா பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “சில பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர்கள் பாகிஸ்தானிய கலைஞர்களை மீண்டும் பணியமர்த்தத் தொடங்கியுள்ளனர் என்று கேள்விப்படுகிறோம். இந்த குறைந்த மனப்பான்மை அவ்வப்போது எழுகிறது. எனவே, மும்பையில் மட்டுமின்றி இந்தியாவில் எங்கும் எந்தவொரு நாடகம் மற்றும் சினிமாவிலும் பாகிஸ்தான் கலைஞர்கள் தென்பட்டால் அது சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் விளைவு களை சந்திக்க நேரிடும் என்று தெளிவான குறிப்பை வழங்குகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது. நவ நிர்மாண் சேனா கட்சி, நீண்டகாலமாகவே பாகிஸ்தான் கலைஞர் களுக்கு எதிராக வெறுப்பை உமிழ்ந்து வருகிறது. கடந்த 2021-ஆம் ஆண்டிலும் ராஜ் தாக்கரே கட்சி, “எந்தவொரு பாகிஸ்தான் கலைஞரும் இந்தியாவில் பணிபுரிய அனு மதிக்கப்படமாட்டார்கள்” என்று மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.