states

பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை முன்னாள் ராணுவ வீரருக்கு 60 ஆண்டு சிறை

ஸ்ரீவில்லிபுத்தூர், செப்.18- பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் ராணுவ வீரருக்கு 60 ஆண்டு காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடி போடு ரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (57). ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் தனக்குச் சொந்தமான காலி இடத்தில் அறை அமைத்து தங்கியிருந்துள்ளார். அப்பொழுது காலி இடத்திற்கு அருகே உள்ள அரசு பள்ளியில் படிக்கும் 6 மற்றும் 7 வயதுள்ள 2 ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு சிறுமிகளை நடராஜ் ஆசை வார்த்தை கூறி 28.11.2016 , 30.11.2016 ஆகிய இரண்டு நாட்கள் அழைத்து பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இதை வெளியே யாரிடமும் கூறினால் உங்களை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

 பாதிக்கப்பட்ட சிறுமிகள் இது குறித்து தங்கள் பெற்றோரிடம் கூறியதை அடுத்து, காவல் துறையில் புகார் செய்யப்பட்டது. அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தார் வழக்கு பதிவு செய்து நடராஜை கைது செய்து விசாரணை நடத்தினர். சுமார் ஐந்து ஆண்டுகளாக ஸ்ரீவில்லிபுத்தூர் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்றுவந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.தனசேகரன் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் நடராஜுக்கு 60 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் விதித்தார். இது தவிர, பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகளுக்கும் தமிழ்நாடு அரசு தலா ரூபாய் 14 லட்சம் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

;