உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, மார்ச் 19- அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்தலாம். ஆனால் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, பாஜகவின் அகில இந்திய தலைமையின் கட்டுப்பாட்டிற்குள் சென்ற அதிமுக தற்போது 2 அணிகளாக சிதறுண்டு கிடக்கிறது. அதிமுகவை கைப்பற்றுவதில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணி யினர் இடையே மோதலும் நீதிமன்றங்களில் சட்டப் போராட்டமும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதுகுறித்து அதிமுக தேர்தல் ஆணையாளர்களாக நியமிக்கப்பட்ட நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெய ராமன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘அதிமுக சட்ட திட்ட விதியின்படி ‘அதிமுக பொதுச்செயலாளர்’ தேர்ந்தெடுக்கப் பட உள்ளார். பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறவர்கள் மார்ச் 18, 19 ஆகிய ஆகிய 2 நாட்கள் ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்தி மனு தாக்கல் செய்யலாம்” என்று அறிவிக்கப் பட்டது.
ஓபிஎஸ் தரப்பு வழக்கு
பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட எடப்பாடி பழனிசாமி வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதனால் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அதிர்ச்சியடைந்தனர். அதிமுக “பொதுச்செய லாளர் தேர்தலை நடத்த தடை விதிக்குமாறு மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குத் தொடர்ந்தனர். இந்த அவசர முறையீடு நீதிபதி குமரேஷ்பாபு முன்பாக மார்ச் 19 ஞாயிறன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது மனோஜ் பாண்டியன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ். ராமன் வாதிடுகையில், பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலுக்கு ஒரே ஒரு வேட்பு மனு மட்டும் தாக்கல் செய்யப்பட்டது. வேறு எவரும் தாக்கல் செய்யவில்லை. உச்சநீதிமன்ற உத்தரவின்படி பொதுக்குழுவின் தீர்மானங்களை எதிர்த்த வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. நிரந்தர பொதுச்செயலாளராக கட்சி யின் முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலி தாவை அறிவித்து விட்டு, தற்போது விதிகளுக்கு புறம்பாக கட்சியின் சட்டவிதிகளில் திருத்தம் செய்து புதிய பொதுச்செயலாளரை நியமித்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஜெயலலிதா கட்சியின் நிரந்தர பொதுச்செய லாளராக இருக்க வேண்டும் என்பது அதிமுக தொண்டர்களின் விருப்பம். வெள்ளிக்கிழமை காலை உயர்நீதிமன்றத்தில் பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்த வழக்கு விசாரணைக்கு வந்து தள்ளி வைக்கப்பட்ட நிலையில் அன்று மாலையே தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு ள்ளது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை தவிர பொதுச்செயலாளர் பதவியை வேறு எவரும் வகிக்க முடியாது. சிறிய சங்கங்களுக்கு கூட தேர்தல் நடத்த வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 7 நாட்கள் நோட்டீசாவது வழங்கப்படும். ஆனால் இந்த தேர்தலில் அந்த அவகாசம் வழங்கப்படவில்லை. கட்சி விதிகளுக்கு முரணாக இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலையே தேர்தல் முடிவுகள் அறி விக்கப்படலாம். எனவே இந்த தேர்தலுக்கு தடை விதிக்காவிட்டால், பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் செல்லாத தாகிவிடும். எனவே அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவித்தார். வைத்தியலிங்கம் தரப்பில் மூத்த வழக்கறி ஞர் மணிசங்கர் வாதிடுகையில், தொண்டர் களுக்கு முறையான அறிவிப்பு வெளியிடப்படா மல் அவசரகதியில் இந்த தேர்தல் நடத்தப்பட உள்ளது. எனவே தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்றார். ஜே.சி.டி. பிரபாகர் தரப்பில் மூத்த வழக்கறி ஞர் ஸ்ரீ ராம் ஆஜராகினார்.
தேர்தலுக்கு தடை கோர முடியாது
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜராகி வாதிடும்போது, “உள்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலை யிடக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறி யுள்ளது. தேர்தல் பணி தொடங்கிவிட்டால் தடை விதிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெளிவு படுத்தியுள்ளது. பல தீர்ப்புகளில் தேர்தல் நடத்தலாம் , இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும் என்று தான் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மேலும் 37 பேர் அவரது பெயரில் விருப்ப மனுக் களை தாக்கல் செய்துள்ளனர். தமிழகம் முழு வதும் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளது. வேட்பு மனு தாக்கல் தேதி அறிவிப்பில் தவறு எதுவும் இல்லை.
தேர்தலுக்கு தடை விதிக்கக் கூடாது. தீர்மானத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டிருப்பதால் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கோர முடி யாது. இது அதிமுக உள்கட்சி விவகாரம். இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஒன்றரை கோடி உறுப்பினர்களின் குரல் முடக்கப்பட்டுள்ளதாக கூறுவது தவறு. பொதுச்செயலாளர் தேர்தல் 1.50 கோடி உறுப்பினர்கள் மூலமே நடத்தப்படு கிறது. ஓபிஎஸ்க்கு ஒரு சதவீதம் கூட ஆதரவு இல்லை. மனுதாரர்களுக்கு கட்சியில் ஆதரவு இல்லை. இவர்களுக்கு கட்சியில் ஆதரவு உள்ளதை நிரூபிக்க சொல்லுங்கள். 8 மாதங்களுக்கு முன்பு கட்சியி லிருந்து நீக்கப்பட்டவர்கள் கட்சியின் நிர்வாகிகள் தேர்தலை எதிர்த்து எப்படி வழக்கு தொடர முடியும். ஒரே தலைமை வர வேண்டும் என்பது தான் கட்சி உறுப்பினர்களின் கருத்து. பொதுக்குழு தான் கட்சியின் அதிகாரம் கொண்ட மேல் அமைப்பு. ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதாகக் கூறி பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை கோர முடியாது” என்றார். அதிமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதிடும்போது, “பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு 4 முறை தனி நீதிபதியிடமும், 3 முறை டிவிசன் பெஞ்சி லும் முறையிட்டு தோல்வி அடைந்துள்ளனர்.கடந்த 2017 ஆம் ஆண்டிலும் இதேபோன்ற நிலை நிலவியது. பலர் வழக்கு போட்டனர். அப்போதும் பொதுக்குழுவே இறுதி முடிவு எடுத்தது. கட்சியில் உள்ள 2643 பொதுக்குழு உறுப்பினர் களில் 2500 உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது” என்றார்.
நீதிபதி கேள்வி
இதையடுத்து நீதிபதி, பொதுச்செயலாளர் தேர்தலுக்கு என்ன அவசியம், பொதுக்குழு வழக்கு ஏப்ரல் 11 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதில், பொதுச்செயலாளர் பதவி தொடர்பான தீர்மானமும் உள்ளது. அதை எதிர்த்து வழக்கு இருக்கும்போது இந்த தேர்தல் ஏன் நடத்தப்படுகிறது என்று கேள்வி எழுப்பினார். இதைத்தொடர்ந்து, ஏப்ரல் 11 ஆம் தேதிக்கு பதிலாக மார்ச் 22 அன்று பிரதான வழக்கு விசாரிக்கப்படும். தேர்தல் நடைமுறைகளை தொடரலாம். ஆனால் முடிவை அறிவிக்கக் கூடாது. வழக்கு விசாரணை வரும் 22 ஆம் தேதி நடைபெறும். 24 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும். அதுவரை தேர்தல் முடிவை அறிவிக்கக் கூடாது என்று நீதிபதி உத்தரவிட்டார்.