வயநாடு நிலச்சரிவுக்கு ஒன்றிய அரசு இன்னும் நிவாரண நிதி வழங்கவில்லை என சட்டப்பேரவையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நிலச்சரிவு சம்பவத்தால் கேரள மாநிலமே பெரும் துயரத்திற்கு உள்ளானது.
தமிழ்நாடு உள்ளிட்டு பல மாநிலங்கள் நிவாரண பொருட்களை வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அனுப்பி வைத்தனர்.
தொழில்துறையினர், திரை பிரபலங்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் பொருட்டு நிவாரண நிதிகளை வாரி வழங்கினர்.
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்புகளை பிரதமர் மோடி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த பேரிடர் நடந்து 2 மாதங்கள் ஆகியும் இதுவரை ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்யாமல் இருந்து வருகிறது. இந்நிலையில், வயநாடு நிலச்சரிவுக்கு இன்னும் ஒன்றிய அரசு நிதி வழங்கவில்லை என சட்டப்பேரவையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.
கேரள சட்டப்பேரவையில் வயநாடு நிலச்சரிவு குறித்து பேசிய முதலமைச்சர் பினராய் விஜயன்: வயநாடு பேரிடருக்கு நிவாரணம் கோரி ஒன்றிய அரசுக்கு விரிவான அறிக்கை அளிக்கப்பட்டது. அதன் பிறகும் ஒன்றிய அரசு இதுவரை எந்த நிவாரணமும் வழங்கவில்லை. வயநாடு பேரிடருக்கு பிறகு, மற்ற மாநிலங்களில் ஏற்பட்ட இயற்கை சீற்றங்களுக்கு ஒன்றிய அரசு நிவாரணங்களை வழங்கி உள்ளது. ஆனால் கேரளாவுக்கு வழங்கவில்லை. ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் மாநில பேரிடர் மேலாண்மை நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அது பேரிடர் நடந்தாலும் இல்லாவிட்டாலும் மாநிலங்களுக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் தொகை மட்டுமே. வயநாடு பேரிடருக்கு ஒன்றிய அரசு உரிய நிவாரணத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம். எனவே மீண்டும் ஒன்றிய அரசை அணுக அமைச்சரவை முடிவு செய்துள்ளது” என தெரிவித்துள்ளார்.