ஆலப்புழா, ஜுன் 28- எந்த ஒரு கிளர்ச்சியையும் ஒரு வாரத்திற்குள் ஒன்றிய அரசால் அடக்கிவிட முடியும். ஆனால், மணிப்பூரில் ஒன்றிய அரசின் ஆதரவு இருப்பதால் கலவரம் தொடர்கிறது என தாமஸ் ஐசக் குற்றம்சாட்டினார். மணிப்பூரில் கலவரத்தை முடிவுக்கு கொண்டு வந்து பாஜக அரசு நீதி வழங்க வேண்டும் என்ற முழக்கங்களை எழுப்பி ஆலப்புழா நகரில் இடதுஜனநாயக முன்னணி ஏற்பாடு செய்திருந்த கூட்டு போராட்டத்தை சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் டாக்டர். டி.எம். தாமஸ் ஐசக் தொடங்கி வைத்தார். அப்போது அவர் மேலும் கூறியதாவது: மணிப்பூரில் கலவரம் தொடங்கி 51 நாட்கள் கடந்துவிட்டன. இதுவரை 131 பேர் பலியாகியுள்ளனர். 17 கோவில்களும் 200 தேவாலயங்களும் அழிக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். 50,000 பேர் வீடுகளைவிட்டு வெளியேறினர். பிரதமர் மோடி கலவரத்தை முடிவுக்கு கொண்டுவர இன்னும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
20 ஆண்டுகளுக்கு முன்
குஜராத்தில் ஒரு மாதம் கலவரம் நீடித்தபோது, “ராஜ தர்மத்தை மறந்துவிடக்கூடாது” என்று அன்றைய பிரதமர் வாஜ்பாய் எச்சரித்தார். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, மணிப்பூரில் அதே நிலை மீண்டும் வருகிறது. மணிப்பூரில் நடக்கும் கலவரம், பா.ஜ.க.வுக்கு சாதகமான நிலைமை யை உருவாக்க திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டது. தனித்து ஆட்சிக்கு வர வேண்டும் என்பது அவர்களது திட்டம். கடந்த முறை மொத்தமுள்ள 60 இடங்களில் 21 இடங்களை மட்டுமே பெற்ற பாஜக, சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியைப்பிடித்தது. ஒரு மாநிலத்தை எப்படி குட்டிச்சுவராக்குவது என்ற செய்தியை மணிப்பூர் வழங்குகிறது. மதம் எதுவாக இருந்தா லும் மனிதர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்ற மகத்தான கருத்தை கேரள மக்கள் நம்புகிறார்கள். அதனால் கேரளாவில் பாஜகவின் ஆட்டத்துக்கு மதிப்பில்லை என்றும் தாமஸ் ஐசக் கூறினார்.