குஜராத்தின் மோர்பி பாலத்தை புனரமைக்க ஒதுக்கப்பட்ட ரூ.2 கோடியில், ரூ.12 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
குஜராத்தின் மோர்பி நகரில் உள்ள மச்சூ நதியின் குறுக்கே அமைந்திருக்கும் தொங்கு பாலம் கடந்த 1880-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. 2022 மார்ச்சில் பராமரிப்புப் பணி காரணமாக மூடப்பட்டது. ஒரேவா குழுமத்தின் (Oreva Group) அஜந்தா நிறுவனம், இந்தப் பாலத்தின் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டது. புனரமைப்பு பணிகளுக்காக ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் 26 அன்று, பாஜக ஆட்சியில் பாலம் மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் நான்கே நாட்களில், கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி பாலம் அறுந்து விபத்துக்குள்ளானது. இதில், 142 பேர் உயிரிழந்தனர்; நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மோர்பி பாலத்தை புனரமைக்க ஒதுக்கப்பட்ட ரூ.2 கோடியில், ரூ.12 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டதும் போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.