states

img

கர்நாடகா: பேருந்து கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலி  

கர்நாடகாவில் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.        

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் பாவகடா பகுதியில் பேருந்து ஒன்று 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்துகொண்டிருந்தது. மேலும் பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேருந்தின் மேல் பகுதியில் அமர்ந்திருந்து பயணித்தாக கூறப்படுகிறது.    

இந்நிலையில் பாவகடா பகுதி பளவள்ளி டவுன் அருகே உள்ள ஏரி மீது சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் 4 மாணவர்கள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.    

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புப்படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் படுகாயமடைந்தவர்களில் சிலர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.        

அதனைதொடர்ந்து இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தும்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

அளவுக்கதிமான பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றதால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிகிறது. 

;