குஜராத்தில் பெய்து வரும கனமழை காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை தொடர்ந்து பெய்து வருகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மாநிலத்தின் தலைநகரான அகமதாபாத்தில் 219 மி.மீ வரை மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும் திங்கள்கிழமை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டன. தொடர் மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்தும், வெள்ளத்தில் மூழ்கியும், இடி மின்னல் தாக்கியும் கடந்த 24 மணிநேரத்தில் 7 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
ஜூன் 1 ஆம் தேதி முதல் தற்போது வரை கனமழைக்கு மாநிலம் முழுவதும் 63 பேர் வரை உயிரிழந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ராஜேந்திர திரிவேதி கூறியுள்ளார்.
தெற்கு குஜராத், டாங், நவ்சாரி, தபி மற்றும் வல்சாத் மாவட்டங்களும் மத்திய குஜராத்தில் பஞ்சஹால், சோட்டா உதேபூர் மற்றும் கெடா மாவட்டங்களும் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் தற்போது வரை 9,000 பேர் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றினர். வெள்ளம் மற்றும் இடிபாடுகளில் சிக்கித் தவித்த 468 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் வால்சாத் மாவட்டத்தில் அம்பிகா நதிக்கு இடையில் வெள்ளத்தில் சிக்கியிருந்த 16 பேரை இந்திய கடற்படையினர் வான்வழியாக பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
சௌராஷ்டிராவில் உள்ள வல்சாத், நவ்சாரி, சூரத், தபி, டாங், நர்மதா, சோட்டா உதேபூர் மாவட்டங்களிலும், கட்ச், ராஜ்கோட், ஜாம்நகர், தேவபூமி துவாரகா மற்றும் மோர்பி ஆகிய மாவட்டங்களில் புதன்கிழமை காலை வரை கனமழை முதல் மிகக் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.
திங்கள்கிழமையான நேற்று மட்டும் குஜராத்தில் 4 மணிநேரத்தில் 18 மி.மீ. அளவு மழைப்பொழிவை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.