states

எல்லை நிலவரம்: தொடரும் அமளி

புதுதில்லி, டிச.16 - இந்திய - சீன எல்லை நிலவரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி, நாடாளுமன்ற மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமையன்றும் எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், மாநிலங்களவை துணைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். எல்லையில் நடந்த மோதல் குறித்து, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் டிசம்பர் 13 அன்று அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தார். எனினும், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க அவர் மறுத்து விட்டார். ஆனால், சீனா உடனான மோதல் தொடர்பாக நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும் என்றும், நாடாளுமன்ற விவாதத்திற்கு அரசு முன்வர வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. வெள்ளிக்கிழமையன்றும் நாடாளுமன்றம் கூடியதும், மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிக்கை ஒன்றை வாசித்தார்.

எல்லையில் நிகழ்ந்த இந்திய - சீன மோதல் விவகாரம் நாட்டின் பாதுகாப்பு சார்ந்தது என்றும், இதுகுறித்த முழுமையான தகவலை அறிந்து கொள்ளும் உரிமை எதிர்க்கட்சிகளுக்கு உண்டு என்றும் குறிப்பிட்டார். இது குறித்து விவாதம் நடத்துவதை அரசு ஏன் தவிர்க்கிறது? என அவர் கேள்வி எழுப்பினார். அதேபோல, காங்கிரஸ் எம்.பி. ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, மாநிலங்களவையில் விதி எண் 267ன் கீழ் நோட்டீஸ் வழங்கி னார். அதில், கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு இந்திய - சீன எல்லை மோதல் குறித்து விவாதிக்க வேண்டும் என வலி யுறுத்தினார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி, அவைக்கு வந்து  இதுகுறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். ஆனால், அந்த கோரிக்கையை, அவையை வழி நடத்திய துணைத்தலைவர் ஹரிவன்ஷ் ஏற்கவில்லை. இதனிடையே, கேள்வி நேரத்தின்போது, சில ஆப்கள் மூலம் பணம் பறிக்கப்படுவது குறித்த உறுப்பினரின் கேள்விக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். அப்போது, அவர் எதிர்க்கட்சிகள் குறித்து மோசமாக விமர்சித்தார். இதனால், ஆவேசமடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ்-சின் இருக்கையை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, துணைத் தலைவர் ஹரிவன்ஷ் மாநிலங்களவையை ஒத்திவைத்தார்.