states

தீக்கதிர் விரைவு செய்திகள்

ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரு மான ராகுல் காந்தியின் 55-ஆவது பிறந்தநாளையொட்டி, வாழ்த்து தெரிவித்திருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எனது லட்சிய சகோதரருக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள். இது ரத்த பந்தம் அல்ல.. தொலைநோக்குச் சிந்தனை மற்றும் நோக்கத்தால் பிணைக்கப்பட்ட பந்தம். நீங்கள் தொடர்ந்து உறுதியாக நின்று தைரியத்துடன் வழிநடத்துங்கள். பிரகாசமான இந்தியாவை நோக்கிய பயணத்தில், வெற்றி நமதே” என்று தெரிவித்திருக்கிறார்.

பொருளமைதி இருந்தால்  பாடலை திருத்தலாம்

சென்னை: பாடல்களில் திருத்தம் கேட்டால் செய்யமாட்டார் என்று பரவும் தகவலுக்கு கவிஞர் வைரமுத்து மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “திருத்தத்திற்கு ஒரு கருத்தமைதி வேண்டும், இருந்தால் உடன்படுவேன். மாற்றியும் கொடுத்திருக்கிறேன். ‘புன்னகை மன்னன்’ படத்தில் வரும் ‘வான்மேகம் பூப்பூவாய்த் தூவும்’ பாடலில், ஒரு வார்த்தையை மாற்றி கொடுத்தேன். ‘உயிர்த்தலம் சிலிர்த்தது’ என்பதற்கு பதில். ‘குடைக்கம்பி  துளிர்த்தது’ என திருத்தம் செய்து கொடுத்தேன். ‘வானத்தைப் பார்த்தேன் பூமியைப் பார்த்தேன் ’பாடலில்  ‘டார்வின்’ என்ற பெயரை மாற்ற மறுத்தேன். பாடல்  வரிகளில் திருத்தத்தை பொருளமைதியே தீர்மானிக்கிறது.  ஆனால், என்மீது பழி வருகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

கீழடியை தடுப்போர்  புதையுண்டு போவார்கள்

சென்னை: ‘கீழடி அகழாய்வு முடிவுகளை தடுப்போர், வரலாற்றில் தோண்டுவாரின்றி புதைந்துபோவார்கள்” என்று ஒன்றிய பாஜக ஆட்சியாளர்களை பாமக நிறுவனர் ராமதாஸ் மறைமுகமாக விமர்சித்துள்ளார். “கீழடியில் கிடைத்திருப்பது தமிழின் பெருமை மட்டுமல்ல,  மானுடத்தின் பெருமை. தமிழர்களின் தொன்மையை தொல்லியல் மூலம் நிறுவுவது, இந்தியாவின் தொன்மை யை உலகிற்கு பறை சாற்றுவதாக அமையும்” என்றும் தெரிவித்திருக்கிறார். பாமகவில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு திமுக காரணம் என சேலத்தில் நடைபெற்ற  மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி பேசி யிருப்பது குறித்த கேள்விக்கு, “அது அப்பட்டமான பொய்.  கடைந்தெடுத்த பொய்” என்றும் ராமதாஸ் கூறியுள்ளார். 

கோட்டாட்சியர் குடும்பத்திற்கு  ரூ. 1.15 கோடி நிதியுதவி

சென்னை: சாலை விபத்தில் உயிரிழந்த முசிறி கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா குடும்பத்திற்கு ஆறு தல் தெரிவித்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு அலுவலர்களுக்கான காப்பீட்டுத் தொகை ரூ. 1 கோடி, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 10 லட்சம், குடும்ப பாதுகாப்பு நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் என மொத்தமாக 1கோடியே 15 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

15 நாளுக்குள்  வாக்காளர்  அட்டை கிடைக்க ஏற்பாடு

புதுதில்லி, ஜூன் 19 - வாக்காளர்களுக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் விரைவாக வழங்கப்பட வேண்டும் என்பதற்காக, இந்தியத் தேர்தல் ஆணையம் புதிய செயல்முறை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை, செயலாக்கம் முதல் அஞ்சல் துறையின் மூலமாக வாக்காளரிடம் வழங்கப்படும் வரை ஒவ்வொரு கட்டமும் நேரடியாக கண்காணிக்க உள்ளது. ஒவ்வொரு கட்டத்திலும் குறுஞ்செய்தி வாயிலாக வாக்காளர்களுக்கு தகவல்கள் வழங்கப்பட உள்ளன. இதற்காக, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ECINet இணையதளத்தில் ஒரு தனிப்பட்ட ஐ.டி தொகுதியை உருவாக்கியுள்ளது.

செஞ்சி நகர் பிரச்சார இயக்கத்தில் பாஜக அடாவடி

சிபிஎம் கடும் கண்டனம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார இயக்கத்தை தடுத்து பாஜகவினர் அடாவடியில் ஈடுபட்டுள்ளனர். ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை அம்பலப்படுத்தும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலம் தழுவிய கிளர்ச்சிப் பிரச்சாரம் நடை பெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஜூன் 17 அன்று செஞ்சி நகரில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ். கீதா தலைமையில் கிளர்ச்சிப் பிரச்சாரம் நடை பெற்றது.  பாஜகவினர் அடாவடி கட்சியின் ஊழியர்கள், பெண்கள் உட்பட ஏராளமானோர் பேருந்து நிலையத்திலும் பல்வேறு தெருக்களிலும் மக்களை சந்தித்து துண்டறிக்கைகளை வழங்கி வந்தனர். அப்போது, பாஜக நகரத் தலைவர் ராமு தலைமையில் சிலர், பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பெண் தோழர்களிடம், நோட்டீஸ் வழங்கக் கூடாது என்று தடுத்தனர். மேலும், பெண்களைப் பார்த்து “நீ எந்த ஊர், நீ எந்த ஊர்” என்று கேட்டு, மோடியை விமர்சித்து நோட்டீஸ் தரக்கூடாது என்று ரகளை செய்துள்ள னர். தொடர்ச்சியாக இந்த பிரச்சாரத்தை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். கட்சி யின் நிதி வசூல் நடைபெற்றபோதும், இதே நபர்கள் ரகளை செய்தனர். காவல்துறையில் புகார் பாஜகவினரின் இந்த அத்துமீறிய செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டித்துள்ளது. கட்சியின் வட்டச் செயலாளர் செஞ்சி நகர காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என். சுப்பிரமணியன், சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறை சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இத்துடன், வகுப்புவாத சக்திகளின் நடவடிக்கைகளை விழுப்புரம் மாவட்ட மக்கள் முறியடிக்க வேண்டும் என்றும், மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளு க்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் மாவட்டச் செயலாளர் என். சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.

பவன் கல்யாண் - ஆதித்யநாத்திற்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்?

மதுரையில் இந்து முன்னணி சார்பாக நடக்கும் முருகன் மாநாட்டை சங்கி மாநாடு; அரசியல் நோக்கத்தோடு அரசியலில் லாபம் காண வேண்டும் என்ற நோக்கத்தோடு நடத்தப்படுகின்ற மாநாடு என, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஏற்கெனவே விமர்சித்திருந்தார்.  “மதத்தால், மொழியால், இனத்தால் மக்களை பிரிக்க இந்த மண்ணிலே முதல்வர் அனுமதிக்க மாட்டார். முடிவு 2026 சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்” என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் சென்னையில் வியாழனன்று செய்தியாளர்களை சந்தித்த  பி.கே. சேகர்பாபு, இந்து முன்னணியின் மாநாட்டை மீண்டும் கடுமையாக விமர்சித்தார். “இந்து சமய அறநிலையத்துறை என்பது அறம் சார்ந்த ஒரு துறை. ஒழுக்க நெறிகளை போதிப்பதே அறத்தின் பணி. கோயில், குளம் இல்லாத ஊரில் குடியேற வேண்டாம் என்பார்கள். ஏனென்றால் பக்தி மனிதனை ஒழுக்கப்படுத்தும். ஆனால் இவர்கள் நடத்தும் முருகன் மாநாடு இனத்தால், மதத்தால், மொழியால் பிளவுப்படுத்தும் சூழலை ஏற்படுத்தும் மாநாடு. மக்களை பிளவுப்படுத்தும் வகையில் ஒரு சாராரை வைத்து நடக்கும் மாநாடு தேவையற்றது. ஆந்திராவில் உள்ள பவன் கல்யாண், உத்தரப் பிரதேசத்தில் உள்ள யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோருக்கும், தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம்?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், “பாஜக ஏற்கெனவே வேல் எடுத்துக் கொண்டு சுற்றி சுற்றி வந்தார்கள். ஆனாலும் தமிழ்நாட்டில் பாஜக வெற்றிபெற முடியவில்லை” என்றார்.