states

img

நடிகை பாலியல் வன்கொடுமை : விசாரணை அதிகாரிகளுக்கு எதிராக சதி வழக்கில் திலீப்பின் செல்பேசிகள் உயர்நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

கொச்சி, ஜன.31- நடிகை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க பட்ட சம்பவத்தில் விசாரணை அதிகாரிகளுக்கு ஆபத்து ஏற்படுத்த சதித் திட்டம் தீட்டிய வழக்கில் நடிகர் திலீப் மற்றும் அவரது சக குற்றவாளிகளின் போன்கள் உயர்நீதிமன்றத்தில் ஜன.31 திங்களன்று தாக்கல் செய்யப்பட்டன. சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திலீப் உள்ளிட்டோரின் 6 போன்களை நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தனர். திலீப்பின் 3 போன்களும், அவரது சகோதரர் அனூப்பின் 2 போன்களும், அவ ரது சகோதரியின் கணவர் சூரஜின் ஒரு போனும்  சீலிடப்பட்ட உறையில் நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்கப்பட்டன. திலீப்பின் வழக்கறிஞர் பிலிப் டி வர்கீஸ், பதிவாளர் ஜெனரல் பி.கிருஷ்ணகுமாரிடம் ஜன.31 திங்களன்று காலை 10 மணிக்கு செல்பேசிகளை ஒப்படைத்தார்.

இதற்கிடையில், திலீப்பின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் செல்பேசி களை விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற குற்றப்பிரிவின் கோரிக்கையை உயர் நீதிமன்ற தனி பெஞ்ச் பிற்பகல் விசாரித்தது. அப்போது டிஜிபி நேரடியாக ஆஜரானார். அப்போது அவர் திலீபை கைது செய்வதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாகவும், நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதால் கைது செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்தார். செல்பேசி களை  தான் குறிப்பிடும் இடத்தில் ஆய்வு செய்ய  கோருவது தவறானது. இதுபோல் குற்றம்சாட்டப் பட்டவருக்கு வாய்ப்பளிப்பது தவறான முன்னு தாரணமாகிவிடும் எனவும் அரசு தரப்பு சுட்டிக்கா ட்டியது. சிபிஐ விசாரணை கோர உள்ளதாக திலீப் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். பிப்ரவரி 1 செவ்வாயன்று மீண்டும் விசாரிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விசாரணை அதிகாரிகளுக்கு ஆபத்து விளை விக்கும் வகையில் திலீப், அவரது சகோதரர் அனூப் மற்றும் அவரது சகோதரியின் கணவர் சூரஜ்  ஆகியோர் இணைந்து சதி செய்ததை விசாரணைக் குழு கண்டறிந்தது. எர்ணாகுளம் எம்ஜி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சதி நடந்துள்ள தாக அரசுத் தரப்பு உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே தெரிவித்தது.

போன் சர்வீஸ் செய்தவர் மர்மமரணம்

திலீபின் செல்பேசிகளின் பராமரிப்புப் பணிகளை செய்தவர் ஸலீஷ். இவர் திலீபின் சில  திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர்  2020 ஆகஸ்ட் 30 அன்று காரில் சென்றுகொண்டிருந்த போது மர்மமான முறையில் உயிரிழந்தார். வாகன விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்டதாக அப்போது  விவாதம் எழுந்தது. தற்போது திலீபின் செல்பேசி கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில்  மீண்டும் இப்பிரச்சனை முன்னுக்கு வந்துள்ளது. ஸலீஷின் சகோதரர் சிவதாசன் அங்கமாலி காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் ஸலீஷின் மரணம் குறித்து விசாரிக்க கோரியுள்ளார்.