states

இந்துத்துவா - யூத இனவெறி தொடர்பு உலகப் பேரழிவின் முன்னோட்டம்

சீத்தாராம் யெச்சூரி  கடும் சாடல்

புதுதில்லி, ஜன. 8- இந்துத்துவா-சியோனிசம் (யூத இனவெறி) ஆகியவற்றுக்கு இடையேயான தத்துவார்த்த பிணைப்பு உலகளாவிய பேரழிவின் முன்னோட்டமாகும் என சீத்தாராம் யெச்சூரி விமர்சித்துள்ளார். பாலஸ்தீன நிலப்பகுதியை இஸ்ரேல் நீண்ட காலமாக ஆக்கிரமித்திருப்பது தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தின் கருத்தை கோரும் வகையில் ஐநா சபையில் வரைவுத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இத்தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா விலகி நின்றது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தீர்மானம்

பாலஸ்தீன நிலப்பகுதியை இஸ்ரேல் நீண்ட காலமாக ஆக்கிரமித்திருப்பது மற்றும் இணைத்திருப்பதன் சட்டரீதியான விளைவுகள், கிழக்கு ஜெருசலேம் உட்பட ஆக்கிரமிக்கப்பட்ட  பகுதியில் உள்ள பாலஸ்தீனர்களின் உரிமைகளைப் பறிக்கும் இஸ்ரேல் ராணுவத்தின் நடைமுறைகள் குறித்து  சர்வதேச நீதிமன்றத்தின் கருத்தைக் கோரும் வரைவுத் தீர்மானம்  கடந்த வாரம் வெள்ளியன்று ஐ.நா. பொதுச் சபையில் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 87 நாடுகள் வாக்களித்தன. இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட 26 நாடுகள் எதிராக வாக்களித்தன. இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட 53 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விலகி நின்றன. 

மிரட்டல் விடுத்த இஸ்ரேல்

வாக்கெடுப்புக்கு முன்பு ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேலின் தூதர் கிலாட் எர்டன்,”சர்வதேச நீதிமன்றத்தின் ஆலோசனைக் கருத்துக்கு அழைப்பு விடுப்பது ‘‘அடாவடியான தீர்மானம்’’ என்று கூறிக்கொண்டார். ஐநா மற்றும் தீர்மானத்தை ஆதரிக்கும் ஒவ்வொரு நாட்டிற்கும் இது ஒரு நெறி சார்ந்த கறையே ஆகும். எந்த ஒரு சர்வதேச அமைப்பும் யூத மக்களை தங்கள் சொந்த நாட்டிலேயே ‘‘ஆக்கிரமிப்பாளர்கள்’’ என்று முத்திரை குத்த முடியாது. தார்மீக ரீதியாக திவாலான மற்றும் அரசியல் மையப்படுத்தப்பட்ட ஐ.நாவிடமிருந்து ஆணையைப் பெறும் சர்வதேச நீதித்துறை அமைப்பின் எந்தவொரு முடிவும் முற்றிலும் சட்டவிரோதமானது’’ எனவும் பேசினார். தீர்மானத்தை ஆதரிக்கும் நாடுகளை மிரட்டும் தொனியில் பேசினார். மேலும் பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பரில் ஐ.நா பொதுச் சபையின் உயர்மட்ட கூட்டத்தில்,”இஸ்ரேல் ஒரு வருடத்திற்குள் 1967-ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட எல்லையில் இருந்து பின்வாங்கவில்லை என்றால், பாலஸ்தீனர்கள் தி ஹேக்கிற்குத் (சர்வதேச நீதிமன்றம் அமைந்துள்ள இடம்) செல்வார்கள் என்று தனது கருத்துகளில் தெரிவித்தார்.”இன்றைய வாக்கெடுப்பு அப்பாஸின் இறுதி எச்சரிக்கையை நிறைவேற்றுவதாகும்” என மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசினார் இஸ்ரேலின் தூதர் கிலாட் எர்டன்.

மதவெறியுடன் திசைத்திருப்ப முயன்ற உலக யூத காங்கிரஸ்

ஐ.நா. சபையில் இஸ்ரேலை நெருக்கும் தீர்மானம் நிறைவேறியதைத் தொடர்ந்து உலக யூத காங்கிரஸின் தலைவர் ரொனால்ட் எஸ்.லாடர், ஐநா வாக்கெடுப்பு தொடர்பாக ஒருபடி மேலே சென்று மதவெறிக் கருத்துகளை கட்டவிழ்த்துவிட்டார். “ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானம் வெட்கக்கேடானது. யூத அரசை தனிமைப்படுத்தும், தீர்மானம் இது. இத்தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த அமெரிக்கா உட்பட 26 நாடுகளை நாங்கள் பாராட்டுகிறோம். தீர்மானத்தில் ஐநா ஆணையர்கள் யூத விரோதக் கருத்துகளைக் கூறியுள்ளனர். இந்த பிரச்சினையை சர்வதேச நீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பது இஸ்ரேலியர்களுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான உரையாடலுக்கு மற்றொரு தடையாக மாறும்” என எரிச்சலை வெளிப்படுத்தினார். உலக யூத காங்கிரஸ் என்பது 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள யூத சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சர்வதேச அமைப்பாகும்.

இந்துத்துவா - சியோனிசம்  மதவெறி தொடர்பு

இந்தியாவில் ஆர்எஸ்எஸ் - பாஜக எப்படி “இந்துத்துவா கொள்கை” மூலம் மதவெறியை தூண்டுகிறதோ, அதே போல இஸ்ரேல் ஆட்சியாளர்கள் யூத இனவெறியை தீவிரமாக அமலாக்குகிறார்கள். இதனை சுட்டிக்காட்டி, ஐ.நா. வாக்கெடுப்பில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாக்களிக்காமல், இஸ்ரேலுக்கு ஆதரவாக ‘விலகி நிற்கும்’ நிலைப்பாட்டை மேற்கொண்ட பாஜக அரசை விமர்சித்துள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி.  “ஒரு மிகப்பெரும் ஏகாதிபத்திய சதியால் நிராகரிக்கப்பட்ட பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கு பாரம்பரியமாக உறுதியான ஆதர அளித்து வந்த இந்தியாவின் நிலைப்பாட்டை மோடி அரசாங்கம் முற்றிலும் மறுக்கிறது. இத்தகைய இந்துத்துவா மற்றும் சியோனிசத்தின் கருத்தியல் தொடர்பு உலகளாவிய பேரழிவின் முன்னோட்டமாகும்” என யெச்சூரி கூறியுள்ளார்.