states

இறந்த வாலிபரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு, அரசு வேலை வழங்கிடுக : சிபிஎம்

சென்னை,மே 15- வீடு கட்டும் திட்டத்தில் செலவு செய்த தொகையை பெற அதிகாரி லஞ்சம் கேட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டு இறந்த வாலிபரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு, அரசு வேலை வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் கமுகக்குடி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (30), வீடுகட்டும் திட்டத்தில் சேர்ந்துள்ளார். சேமிப்பு தொகையை செலவு செய்தும், கடன் வாங்கியும் செலவு செய்த அவர் தவணைத் தொகைக்காக அரசு அலுவலகத்தை அணுகிய போது, ரூ.18 ஆயிரம் லஞ்சம் கேட்டதால், மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலை செய்துகொண்டுள்ளார். நன்னிலம் வட்டார வளர்ச்சி அலுவலக பணி மேற்பார்வையாளர் மகேஷ்வரன் மீது புகார் தெரிவித்து, மணிகண்டன் வெளியிட்ட இறுதி வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அரசு உடனடியாக செயல்பட்டு லஞ்சம் கேட்ட அதிகாரியை கைது செய்ய  வேண்டும் என வலியுறுத்துகிறோம். வீடு கட்டும் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிக்கு தவணை தொகையை உடனுக்குடன் வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், லஞ்சத்தை முற்றிலும் ஒழித்திட வேண்டும். மகனை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம். குடும்பத்தினருக்கு  அரசு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன்,  ஒருவருக்கு, கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்க வேண்டும் என்று கட்சியின் மாநில செயற்குழு சார்பில் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.