states

‘மாணவர்களை அழைத்துச் சென்றால் ரயிலை மறிப்போம்’

திண்டுக்கல்,நவ.18-  காசியில் தமிழ் கலாச்சாரம், பண்பாட்டை கற்றுத் தருகிறோம் என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள பள்ளி - கல்லூரி மாணவர்களை தொடர்ந்து ரயிலில் அழைத்துச் சென்றால் அந்த  ரயில் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  ரயில் மறியல் போராட்டம் நடத்தும் என்று மாநி லச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறி வித்துள்ளார்.  திண்டுக்கல்லில் நவம்பர் 18 வெள்ளி யன்று கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  தமிழக மீனவர்களை இலங்கை அரசாங்கம் ஒவ்வொரு நாளும் கைது செய்வதும்,  அவர்களு டைய படகுகளை சேதப்படுத்துவதும்,  துப்பாக்கி யால் சுடுவதும், அவர்களது வலைகளை அறுத்து நாசப்படுத்துவதும் என தொடர்ந்து அராஜகமாக செயல்பட்டு வருகிறது. சர்வதேச எல்லையில் கூட நமது மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி மறுக்கப்படுகிறார்கள். உயிரைப் பணயம் வைக்கிற மோசமான நிலை நீடிக்கிறது. ஆனால் ஒன்றிய அரசு இந்த பிரச்சனையில் ஒரு துரும்பைக்கூட அசைக்கவில்லை. இலங்கை அரசாங்கத்தோடு ஒன்றிய,  மாநில அரசுகள் கலந்து பேசி ஒரு நல்ல தீர்வை எட்ட வேண்டும்.  

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே பேரறிவாளன் விடுதலைசெய்யப்பட்டார். மீதமுள்ள 6 பேரை உச்சநீதி மன்றம் விடுதலை செய்யவில்லை.அமைச்சர வை மற்றும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இவர்களது விடுதலை குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில அரசுகளே விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் வழிகாட்டியுள்ளது. குடியரசுத் தலைவருக்கும் மனு அனுப்பினார்கள். ஆனால் ஆளுநர், அவர்களது விடுதலையை தாமதப்படுத்தினார். அப்படி தாமதப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி, உச்சநீதிமன்றம் சிறப்பு விதியைப் பயன்படுத்தி விடுதலை செய்கிறது. இந்நிலையில் ஒன்றிய அரசு இந்ததீர்ப்பு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று  சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது. குஜராத் பில்கிஸ்பானு வழக்கில் ஆயுள் தண்ட னை பெற்றவர்கள் குறைந்தபட்சம் 10 ஆண்டு, 12 ஆண்டு தண்டனை பெற வேண்டும். அந்த வழக்கு தொடர்பாக ஒன்றிய அரசு கவலைப்படவில்லை. அந்தக் கொடியவர்களின் விடுதலையை நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாடுகிறார்கள். எனவே ஒன்றிய அரசு, ராஜீவ் வழக்கில் நீண்டகால தண்டனை அனுபவித்துவிட்ட 6 பேர் விடுதலை செய்யப்பட்ட வழக்கில் மறு சீராய்வு மனு போட்டது நியாயமில்லை. 

மாணவர்களுக்கு காவித்துண்டு அணிவிப்பு ஏன்?

காசி தமிழ் பண்பாட்டு சங்கமம் என்ற அமைப்பை உருவாக்கி ஐ.ஐ.டி. மற்றும் கல்லூரி களில் பயிலும் 2500 மாணவர்களை இங்கிருந்து  காசிக்கு அழைத்துச் சென்று வாரணாசி பல்கலைக்கழகத்தில் கலாச்சாரம்,  பண்பாடு என்று சொல்லிக்கொண்டு அங்கேயே தங்க  வைத்து பயிற்சி அளிக்க உள்ளதாக கூறப்படு கிறது. இது ஒன்றிய அரசாங்கத்தின் திட்டம் ஆகும். மாநில அரசாங்கத்தின் திட்டம் அல்ல. இந்த திட்டத்தின் பின்னணியில் ஆளுநர் இருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். இருக்கிறது. எனவே கல்லூரி மாணவர்களை  குறிப்பாக ஐ.ஐ.டியில் படிக்கும் மாணவர்களை ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்ப்பதற்காகத்தான் இந்த முயற்சி நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் கால்  ஊன்றுவதற்கு மாணவர்களை பிடிக்க முயற்சிக்கிறார்கள். அங்கு செல்லக்கூடிய மாண வர்களுக்கு எழும்பூரில் நடைபெற்ற வழியனுப்பு  நிகழ்ச்சியில் அனைத்து மாணவர்களுக்கும் காவி துண்டு அணிவித்து வழியனுப்பி யுள்ளார்கள். காவித்துண்டு எதற்கு அணிவிக்க  வேண்டும்? நமது இந்திய கலாச்சாரத்தில், தமிழ் கலாச்சாரத்தில் காவித் துண்டு தான்  அடையாளமாக இருக்கிறதா? இந்திய கலாச்சாரத்தை காசியில் போய் என்ன கற்றுக் கொடுக்கப் போகிறார்கள்? எல்லாவிதமான விதிமுறைகளையும் மீறி காசி சங்கமம் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சிக் கூடமாக பள்ளி கல்லூரிகளை மாற்றும் பணியில் பகிரங்கமாக ஈடுபட்டுள்ளார்கள். இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  வன்மையாக கண்டிக்கிறது. தமிழ்நாடு அரசு இதனை வேடிக்கை பார்க்கக் கூடாது. தொடர்ந்து மாண வர்களை  காசிக்கு அழைத்துச் சென்றால் அந்த ரயில் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறியல் போராட்டத்தில் ஈடுபடும் என்று எச்சரிக்கிறோம். 

‘இந்தி செல்’களை  கலைக்க வேண்டும்

இந்தி திணிப்பு தொடர்பாக ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் உள்ள வங்கி  மற்றும் அலுவலகங்களில் ‘இந்தி செல்’ என்ற ஏற்பாட்டை உருவாக்கியிருக்கிறார்கள். அலுவல் மொழியாக இந்தியை எப்படி சிறப்பாக செயல்படுத்துவது என்பதற்காக எல்லா அலுவலகங்களிலும் ஒன்றிய அரசு இதை அமைத்துள்ளது. தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்தி செல்களை கலைக்க வேண்டும் . ஏனெனில் 1976 இல் அலுவல் மொழி சட்டம் கொண்டு வந்த போது அந்த சட்ட அமலாக்கத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அப்படி அரசே விதிவிலக்கு கொடுத்த பிறகு இப்படி நடந்து கொள்ளலாமா ? இதுதொடர்பாக தமிழக அரசு ஒன்றிய அரசாங்கத்தை வற்புறுத்த வேண்டும். இந்தி செல்களை உடனடியாக கலைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.  பேட்டியின் போது சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி,  மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.