வடகிழக்கு பருவமழை 27 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது வானிலை ஆய்வு மையத் தலைவர் தகவல்
சென்னை,டிச.31- தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை 589.9 மி.மீ பதிவாகியிருக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். சென்னையில் டிசம்பர் 31 அன்று செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரையில் அக்டோபர் மாதத்தில் 214 மி.மீ, நவம்பர் மாதத்தில் 140 மி.மீ, டிசம்பர் மாதத்தில் 235 மி.மீ. ஆக மொத்தம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் 589.9 மி.மீ மழை பதிவாகியிருக்கிறது. அக்டோபர் மாதத்தில் இயல்பை விட 25 சதவீதம் அதிகமாகவும், நவம்பர் மாதத்தில் இயல்பை விட 23 சதவீதம் குறைவாகவும், டிசம்பர் மாதத்தில் 164 சதவீதம் இயல்பைவிட அதிகமாக மழை பதிவாகியுள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான பருவமழை காலக்கட்டத்தில் 33 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. கடந்தாண்டு இயல்பை விட 4 சதவீதம் அதிகமாக பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு கடந்தாண்டைவிட 27 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியிருக்கிறது.குறிப்பாக, பெஞ்சால் புயலால் அதிகமாக மழை பெய்திருந்தாலும், டிசம்பர் 11 முதல் 14 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக பரவலாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில், அதி கனமழையும், மிக கனமழையும் பெய்துள்ளது. ஒரு வருடத்துக்கான சராசரியைப் பொறுத்தவரையில், 2024-ம் ஆண்டில் தமிழகத்தின் எந்தவொரு மாவட்டத்திலும் இயல்பைவிட குறைவான அளவு மழை பதிவாகவில்லை. திருநெல்வேலியில் இயல்பை விட மிக அதிகமாக மழை பதிவாகியுள்ளது. 27 மாவட்டங்களில் அதிகமாகவும், 12 மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும் மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் பொங்கல் வரை மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்பின்னர் வடகிழக்குப் பருவமழை விலகும். இவ்வாறு அவர் கூறினார்.
அரசை இழிவாக விமர்சித்த காவலர் பணியிடை நீக்கம்
சென்னை,டிச.31- அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசை இழிவாக விமர்சனம் செய்த வேலூர் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டம் கிராமிய காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரியும் அன்பரசன் என்பவர், மாணவி பாலியல் விவகாரம் தொடர்பான முகநூலில் இழிவாக பதிவிட்டுள்ளார். இதுகுறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில், சீருடைப் பணி விதிகளை மீறியதற்காக அன்பரசனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், அவர் பதிவிட்ட கமெண்ட் முகநூல் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
அனுமதியின்றி போராட்டம் : சீமான் கைது
சென்னை,டிச.31- சென்னையில் தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை (டிச.31) காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த, நாம் தமிழர் கட்சியினர் திட்டமிட்டிருந்தனர். இதற்கு காவல்துறை யினர், பல்வேறு காரணங்களால் அனுமதி மறுத்தனர். காவல்துறையின் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
10,701 பேர் அரசுப் பணிக்கு தேர்வு
சென்னை,டிச.31- 2024 ஆம் ஆண்டில் 10,701 பேர் அரசுப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஆண்ட றிக்கை வெளியிட்டுள்ளது. ஆண்டு திட்ட அட்டவணை யில் குறிப்பிட்ட தேதிகளில், அனைத்துத் தேர்வுகளும் நடத்தப்பட்டதாக டிஎன்பி எஸ்சி அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.
விலையில்லா புத்தகங்கள் கல்வித்துறை உத்தரவு
சென்னை,டிச.31- விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் வழங்குவதற் காக அரசுப் பள்ளிகளில் பயி லும் மாணவர்களின் எண்ணி க்கை விவரங்களை எமிஸ் தளத்தில் உறுதிசெய்ய வேண்டும் என்று தொடக்க கல்வித்துறை உத்தர விட்டுள்ளது. இது தொடர்பாக தொடக் கக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்ற றிக்கை வருமாறு: வரும் கல்வியாண்டின்(2025-26) முதல் பருவத்தில் இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்குவதற்கான உத்தேச தேவைப் பட்டியல் எமிஸ் தளத்தின் மூலம் பெறப் பட்டு, மாணவர்கள் எண்ணி க்கை விவரம் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்துக்கு வழங்கப்பட உள்ளது. எனவே, தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களின் விவரங்களும் எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளதா என்பது சம்பந்தப் பட்ட வட்டாரக் கல்வி அலு வலர்கள் மூலம் மாவட்டக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
வயநாடு நிலச்சரிவு அதிதீவிர பேரிடராம்!
மோடி அரசு மழுப்பல்
புதுதில்லி, டிச.31- 2024 ஜூலை மாதம் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத் தின் புஞ்சிரிமட்டம், சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட பகுதிகளில் பெரும் நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணில் புதைந்தன. இந்த நிலச்சரிவில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த நிலச்சரிவு பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவித்து, ரூ.2,000 கோடி சிறப்பு நிதி தொகுப்பை உடனடியாக வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கேரள மாநில அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் கடிதம் எழுதியிருந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை ஒன்றிய உள்துறை அமைச்சகம் தேசிய பேரிடராக அறிவிக்காமல் வயநாடு நிலச்சரிவை அதிதீவிர பாதிப்பாக அங்கீகரித்து கேரள அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. மேலும் அக்கடிதத்தில் ஒன்றிய அரசு தரப்பில், சிறப்பு நிதி ஒதுக்கீடு குறித்த எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை. மாறாக மாநிலங்களுக்கு வழக்கமாக ஒதுக்கப்படும் பேரிடர் நிவாரண நிதியை வயநாடு மீட்புப் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ள அறி வுறுத்தப்பட்டுள்ளது. மோடி அரசின் இந்த மழுப்பலான அறிவிப்பால் கேரள அரசு கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக செய்திகள் வெளி யாகியுள்ளன.
ஸ்டேண்ட்அப் காமெடியில் நேருவை அவமதித்து பேசியவரை கைது செய்ய கோரிக்கை
சென்னை, டிச.31- ஸ்டேண்ட்அப் காமெடியில் மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவைப் பற்றி கிண்டலடித்து அவமதித்த பரத் பாலாஜி என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் கோரிக்கை விடுத்து உள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பரத் பாலாஜி ஸ்டேண்ட்அப் என்ற பெயரில் மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவைப் பற்றி கிண்டலடித்துப் பேசுகிறார். இதைக் கேட்டு மக்களும் சிரிக்கின்றனர். நேருவைக் அவமதிப்பு செய்து பேசிய பரத் பாலாஜிக்கு எதிராகப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எதிர்ப்புத் தெரிவித்து, தனது எக்ஸ் தளப் பக்கத்தில், ” நேரு குறித்து அவதூறாக, அவரின் நன்மதிப்பை சீர்குலைக்கும் வகையில் பரத் பாலாஜி என்பவர் பேசிய பேச்சை வன்மை யாகவும், கடுமையாகவும் கண்டிக்கின்றேன். வரலாறு குறித்து எள்ளளவும் அறியாத இவர்மீது தமிழ்நாடு காவல்துறை கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து உடனடியாகக் கைது செய்ய வேண்டும். முதலமைச்சர் இவ்விஷயத்தில் தலையிட்டு, உரிய முறையில் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.