சென்னை, அக். 17 - போட்டி சங்கத்தை உருவாக்கி தொழில் அமைதியை சீர்குலைத்து தொழிலாளர் விரோதச் செயலில் ஈடுபட்டுள்ள இந்தியா யமஹா நிறுவனத்தைக் கண்டித்து அக்டோ பர் 19 புதனன்று தமிழகம் முழுவதும் யமஹா நிறுவன விற்பனை மையங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என சிஐடியு மாநிலக்குழு அறிவித்துள்ளது. இந்தியா யமஹா நிறுவனத்தின் தொழி லாளர் விரோதப் போக்கினைக் கண்டித்து அக்டோபர் 11 அன்று துவங்கி கடந்த 8 நாட்களாக சிஐடியு தொழிற்சங்கம் தொடர் வேலைநிறுத்தத் தில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் திங்களன்று யமஹா நிர்வாகத்திடம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தொழிலாளர் துறை துணை ஆணை யர் ஆகியோர் முன்னிலையில் சிஐடியு தலை வர்கள் அ.சவுந்தரராசன், எஸ்.கண்ணன், இ.முத்துகுமார், டி.பிரகாஷ், சங்கர், தமிழ் அழகன் ஆகியோர் பங்கேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில், மறைமுகத் தேர்தல் மூலம் பெரும்பான்மை தொழிற்சங்கத்தை தேர்வு செய்வது என்ற ஆலோசனையை நிர்வாகம் ஏற்க மறுத்துவிட்டது.
இந்நிலையில் வேலைநிறுத்தம் தொடர்கிறது. மறைமுகத் தேர்தல் மூலம் பெரும்பான்மை தொழிற்சங்கத்தை தேர்வு செய்வது என்பது அரசியல் சாசன உரிமை மற்றும் தொழிற்சங்க சட்டங்கள் உறுதிசெய்துள்ள உரிமையாகும். அதை யமஹா நிர்வாகம் மறுக்கும் நிலையில் தமிழக அரசு தலையிட்டு உரிய தீர்வுகாண வேண்டும் என சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் வலியுறுத்தியுள்ளார். தொழிலாளர்களின் தொடர் போராட்டத் திற்கு வலுசேர்க்கும் விதமாக அக்டோபர் 18 (இன்று) செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங் களில் உள்ள யமஹா விற்பனை மையங்கள் முன்பு சிஐடியு ஆர்ப்பாட்டம் நடைபெறும். அக்டோபர் 19 அன்று தமிழகம் முழுவதும் உள்ள யமஹா விற்பனை மையங்கள் முன்பு சிஐ டியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்; அன்றைய தினம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பல்வேறு தொழிற்சா லைகளின் சிஐடியு சங்கங்கள் சார்பில் பேரணியாக புறப்பட்டு யமஹா இந்தியா நிறுவனத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் ஜி.சுகுமாறன் அறிவித்துள்ளார்.