- விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் வழங்க ரூ.51,875 கோடி ஒதுக்கீடு செய்து ஒன்றிய அமைச்சர வை ஒப்புதல் வழங்கியுள்ளது. 2023 மார்ச் 31ம் தேதி வரை மானிய விலையில் உரம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்து ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்க தடை கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி யு.யு.லலித் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். நவம்பர் 9-ல் உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்கவுள்ளார்.
- பருவமழை சிறப்பு ஏற்பாட்டின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் மின் விநியோகத்தை சீராக வழங்க பகலில் 6,540 பணியாளர்களும், இரவில் 2,400 பணியாளர்களும் என மொத்தம் 8,940 கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
- சென்னை விமான நிலையத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலைய கார் பார்கிங் வசதி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. பழைய பாஸ் உள்ளவர்கள் மட்டும் பாஸ் காலாவதி ஆகும் வரை பார்கிங் வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். புதிய பாஸ் மற்றும் ஏற்கெனவே பாஸ் வைத்திருப்பவர்களின் பாஸ்கள் புதுப்பிக்கப்படாது என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
- சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான ஷியாம் சரண் நேகி (106 வயது) இமாச்சலப்பிரதேச சட்டமன்ற தேர்தலுக்காக கல்பாவில் உள்ள அவரது இல்லத்தில் தபால் ஓட்டு மூலம் பதிவு செய்தார்.
- மஞ்சள் ஆறுப் பாசனப் பகுதியில் மாசுக்கட்டுப்பாடு நிர்வாகத்தை முழுமையானதாகவும், திட்டமிட்டதாகவும் மாற்றும் முயற்சியில் சீனா மும்முரமாக உள்ளது. மஞ்சள் ஆற்றைப் பாதுகாப்பது தொடர்பாக ஒரு சட்டத்தை தேசிய மக்கள் காங்கிரஸ் ஏற்கனவே இயற்றியுள்ளது. ஏப்ரல் 1, 2023 முதல் இந்த சட்டம் நடைமுறைக்கு வரும். தற்போது பாசனப்பகுதியைப் பாதுகாப்பதற்காக இரண்டாவது மசோதா ஒன்றையும் நிறைவேற்றியிருக்கின்றனர்.
- லெபனானின் ஜனாதிபதி மிசேல் ஆன் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். 2016-ஆம் ஆண்டில் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்ட மிசேல் ஆன், ‘‘புதிய அத்தியாயத்திற்குள் லெபனான் நுழைகிறது. மிகப்பெரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய தருணமாக இது அமையும். இத்தகைய முயற்சிகள் இல்லையென்றால் நாட்டை மீண்டும் சொந்தக்கால்களில் நிற்க வைக்க முடியாது’’ என்று குறிப்பிட்டார். ஜனாதிபதி மாளிகையில் இருந்து தனது வீட்டிற்கு மிசேல் ஆன் சென்றபோது நூற்றுக்கணக்கான மக்கள் ஊர்வலமாகவே பின்தொடர்ந்தனர்.
- சோமாலியாவில் கல்வி அமைச்சக அலுவலகத்தைக் குறிவைத்து நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் குழந்தைகள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தாக்குதல் குறித்து விசாரித்து வரும் காவல்துறை கார் மூலமாக குண்டுகள் வெடிக்கப்பட்டன என்பதைத் தவிர வேறு விபரங்கள் எதையும் தெரிவிக்க மறுத்துள்ளது.