கேரள மாநிலத்தில் சோலார் ஊழல் வழக்கு தொடர்பாக ஸ்டிங் ஆபரேஷன் நடத்திய இரண்டு பத்திரிகையாளர்கள் மீது தொடரப்பட்ட குற்றவியல் வழக்கை அம்மாநில உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கேரள உயர்நீதிமன்ற நீதிபதி பி.வி.குன்ஹிகிருஷ்ணன் வழங்கிய தீர்ப்பில்,”அரசின் பணி எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பதை நாட்டு மக்களுக்கு அறியச் செய்யும் கடமை பத்திரிகைகளுக்கு உள்ளது. ஆனால் சில நேரங்களில் மக்களுக்கு உண்மையை தெரிவிப்பதற்காக பத்திரிகைகள் சட்டத்தின் எல்லையை மங்கச் செய்ய வேண்டியுள்ளது. ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு நான்காவது தூணான பத்திரிகைகள் மிகவும் அவசியமானது. அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தாமல் மக்கள் தங்கள் ஜனநாயகச் செயல்பாட்டில் ஈடுபட பத்திரிகைகள் உறுதி செய்து பணியாற்ற வேண்டும். இதனை பத்திரிகைகள் பின்பற்றுகிறதா என்பது வேறு விஷயம்.
உண்மையை வெளிக்கொணர பத்திரிகைகள் சில நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. அவற்றில் ஒன்று தான் ஸ்டிங் ஆபரேஷன். பொதுவாக இது சட்டத்தின்படி அனுமதிக்கப்படாத ஒன்றாகும். இருப்பினும் பத்திரிகை களால் நடத்தப்படும் இத்தகைய ஸ்டிங் ஆப்ரேஷன்கள் சட்டப்படியானதா என்பதை வழக்கு அடிப்படையில் முடிவு செய்யப்பட வேண்டும். சோலார் ஊழல் வழக்கில் இரு பத்திரிகையாளர்களும் ஸ்டிங் ஆபரேஷன் நடத்தியதை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு பத்திரிகையாளர்களும் சிறைக்குள் நுழைவதற்கு முன் அனுமதி பெற்றதாகவும், சாட்சியை பதிவு செய்ய முயன்றபோது, சிறை அதிகாரிகளால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதையும் நீதிமன்றம் அறிந்துள்ளது. அதனால் பத்திரிகையாளர்கள் மீதான வழக்கை ரத்து செய்வது பொருத்தமானது” என நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.