india

டெல்லியில் நடைபெறும் ஜனாதிபதி விருந்தில் பங்கேற்கும் கோவையைச் சேர்ந்த நடத்துநர் யோகநாதன்

கோவையை சேர்ந்த நடத்துனர் யோகநாதன் டெல்லியில் நடைபெறும் சுதந்திர தின விருது வழங்கும் விழாவில் பங்கேற்பு.

கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் யோகநாதன். இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து நடத்துனராக பணியாற்றி வருகிறார். கடந்த 37 ஆண்டுகளாக மரங்களை நட்டு பராமரிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இவர் பொது இடங்கள், அரசுப்பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட இடங்களில் 6 இலட்சத்திற்கும் மேற்பட்ட மரங்களை நடவு செய்ததோடு மட்டுமின்றி, தொடர்ந்து பராமரித்து வருகிறார். விதை நேர்த்தி, மரம் நடுதல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், இலவசமாக மரக்கன்றுகளை வழங்குதல், அரிய வகை அழிந்து வரும் மரங்களை மீட்டெடுத்தல் உள்ளிட்ட பணிகளை யோகநாதன் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். கடந்த 2008 ஆம் ஆண்டில் ’பசுமை போராளி’ விருதினை, அப்போதைய துணை குடியரசு தலைவர் ஹமீது அன்சாரி வழங்கி கெளரவித்தார். மேலும் தமிழக அரசின் சுற்றுச்சூழல் விருது, டிம்பர் லேண்டின் மர மனிதன் விருது, மத்திய நீர்வளத்துறை காலநிலை போர்வீரர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். 2015ல் சிபிஎஸ்சி ஐந்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இவரை பற்றிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில் ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று சமூக பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு ஜனாதிபதி விருந்து அளிப்பது வழக்கம். அதன்படி இந்தாண்டு டெல்லியில் இன்று ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் 'AT HOME RECEPTION' என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பல்வேறு நபர்களுக்கு விருந்து அளிக்க உள்ளார். அதில் பங்கேற்க மரம் யோகநாதனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பல லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு வளர்த்து பசுமைப்புரட்சியில் சாதனை செய்து வருவதை பாராட்டும் வகையில் யோகநாதனை குடியரசு தலைவர் நேரில் அழைத்து கெளரவபடுத்த உள்ளார். இதற்காக டெல்லி சென்றுள்ள யோகநாதன் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் பங்கேற்பதுடன், குடியரசு தலைவர் அளிக்கும் விருந்திலும் பங்க உள்ளார். குடியரசு தலைவரால் கெளரவிக்கப்படும் யோகநாதனுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.