புதுதில்லி, ஏப்.7- ஜேஇஇ தேர்வுகளில் தளர்வுகள் தரப்படுமா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கேட்டிருந்த கேள்விக்கு, ஒன்றிய அமைச்சர் பதிலளித்துள்ளார்.
ஜேஇஇ (JEE) 2022ஆம் ஆண்டு தேர்வுகளில் சிரமங்களை எதிர்கொண்ட தேர்வர்களுக்காக, 2023ஆம் ஆண்டு நடக்கவுள்ள, முதன்மை மற்றும் அட்வான்ஸ்டு தேர்வுகளில், அதன் தகுதி அளவுகோல்களில் ஒருமுறை தளர்வு வேண்டிய பிரதிநிதித்துவங்கள் ஏதேனும் அரசு பெற்றுள்ளதா என்றும், அப்படியெனில் அதன் விபரங்கள் என்ன என்றும் கேட்டிருந்தார்.
இதற்கு எழுத்துமூலம் பதிலளித்த ஒன்டிறய கல்வித்துறை இணை அமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார் கூறியதாவது:
2023 தேர்வுகளில், அதன் தகுதி அளவுகோல்களில், ஒருமுறை தளர்வு வேண்டிய, பிரதிநிதித்துவங்கள், ஜேஇஇ முதன்மை தேர்வுகள் 2022இல் சிரமங்களை எதிர்கொண்டதாகக் கூறும் சில மாணவர்களிடமிருந்து அரசு பெற்றுள்ளது. ஜேஇஇ முதன்மை தேர்வானது தேசிய தேர்வு முகமையால் (National Testing Agency -NTA) நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை (NTA) தந்த தகவல்களின்படி 2022ஆம் ஆண்டு தேர்வுகளுக்குப் பிறகு, அவர்களால் பெறப்பட்ட புகார்களை ஆய்வு செய்ததன் மீது, உண்மை அறிக்கைகள் பெறப்பட்டன. முறையான சரிபார்ப்புக்கு பிறகு, 29-06-2022 (ஷிஃப்ட் 2,) மற்றும் 30-06-2022 (ஷிஃப்ட் 1), செஷன் 1 மற்றும் 30-07-2022 (ஷிஃப்ட் 1) செஷன் 2 ஆகிய தேதிகளில் நடந்த மறுதேர்வுகளுக்கு பாதிக்கப்பட்ட தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். மேலும், 2021, 2022இல், 12ஆம் வகுப்பு / அதற்கு சமமான தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது 2023இல் தேர்வு எழுதுபவர்களும், ஜேஇஇ முதன்மை 2023 தேர்வுகளை எழுதலாம். 2020ஆம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்தவர்களுக்கு, ஜேஇஇ முதன்மை தேர்வுகள் 2020ஆம் ஆண்டில் இரண்டு முறையும், 2021ஆம் ஆண்டில் நான்கு முறையும், 2022ஆம் ஆண்டில் இரண்டு முறையும் நடத்தப்பட்டு, ஜேஇஇ முதன்மைத் தேர்வுகளை எழுத அவர்களுக்குப் போதிய வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. இதன்படி, ஜேஇஇ முதன்மைத் தேர்வுகள் 2023க்கான தகுதி அளவுகோல்களில், ஒருமுறை தளர்வு அளிப்பதற்கான எந்தவொரு முன்மொழிவும் பரிசீலனையின் கீழ் இல்லை.