india

img

காசாவில் இனப்படுகொலைகளை நிறுத்துக! - சிபிஎம், சிபிஐ கூட்டறிக்கை

காசாவில் இனப்படுகொலைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் கோரியுள்ளன.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து. ராஜாவும் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காசாவில் நடந்துவரும் இஸ்ரேலியத் தாக்குதலில் பொது மக்களின் பாதுகாப்பு, சட்டரீதியான மற்றும் மனிதாபிமான கடமைகளை நிலைநிறுத்துதல் தொடர்பாகவும், ஐ.நா. பொது மன்றம் பெரும்பான்மையாக நிறைவேற்றிய தீர்மானத்தினை இந்தியா ஆதரிக்காது ஒதுங்கிக்கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பெரும்பான்மை நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ள தீர்மானத்தை இந்தியா புறக்கணித்திருப்பது, அது எந்த அளவிற்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளியாக மாறி, இந்திய வெளியுறவுக் கொள்கையை எந்த அளவிற்கு வடிவமைத்திருக்கிறது என்பதையும், அமெரிக்கா-இஸ்ரேல்-இந்தியா பிணைப்பு உறுதிப்படுத்தப்பட்டிருப்பதையும் காட்டுகிறது. இது, இதுநாள்வரையிலும் பாலஸ்தீனப் பிரச்சனையில் இந்தியா பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இருந்துவந்த நிலையை மறுதலிக்கிறது.

ஐக்கிய நாடுகள் பொது மன்றம் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ள நிலையில், காசா பகுதியில் இஸ்ரேல் தன் இனப்படுகொலை நடவடிக்கைகளை வான் வழியாகவும், தலை வழியாகவும் முடுக்கி விட்டுள்ளது. 22 லட்சம் பாலஸ்தீனர்கள் வாழும் காசா பகுதியில் அனைத்து தகவல் தொடர்புகளையும் துண்டித்துள்ளது.

பெரும்பான்மை நாடுகளின் ஆதரவுடன் ஐ.நா.பொது மன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை மதித்து, உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். 1967க்கு முந்தைய எல்லைகளுடன், கிழக்கு ஜெருசலத்தை பாலஸ்தீனத்தின் தலைநகராகக் கொண்டு, இரு நாடுகளுக்கான பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தை அமல்படுத்திட ஐ.நா.மன்றம் தன்னை மீண்டும் முனைப்பாக்கிக்கொள்ள வேண்டும்.  

இவ்வாறு அவர்கள் அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்கள்.