மத்தியத்துவப்பட்ட அகில இந்திய தேர்வுகளில் நடைபெற்றுள்ள ஊழல்களுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய மனிதவள வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜினாமா செய்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு, அகில இந்திய அளவில் நடைபெறும் அனைத்து நுழைவுத் தேர்வுகளிலும் மிக மோசமான விதத்தில் ஊழல்கள் நடைபெற்றுள்ளதை அறியும்போது மிகுந்த வேதனையை அடைந்துள்ளது. அது, நீட்-இளங்கலை (NEET-UG)தேர்வாக இருந்தாலும் சரி, பல்கலைக் கழக ஆணையத்தின் ‘நெட்’(UGC-NET) தேர்வாக இருந்தாலும் சரி, இப்போது நடைபெற்ற நீட்-முதுகலை (NEET-PG) தேர்வாக இருந்தாலும் சரி, அனைத்திலும் ஊழல்கள் நடைபெற்றுள்ளது வெளிச்சத்திற்கு வந்ததன் காரணமாக அனைத்தும் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் நடைபெற்றுள்ள ஒழுங்கீனங்களின் விளைவாக நாட்டின் உயர்கல்வித்துறையின் கேந்திரமான துறைகளின் செயல்முறைகள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன.
இவற்றில் ஊழல் நடைபெற்றுள்ளது என்று முதல்நோக்கிலேயே நிறுவப்பட்டிருப்பது மட்டுமல்ல, கல்வித்துறையில் மத்தியமயமாக்கல், வணிகமயமாக்கல் மற்றும் வகுப்புவாதமயமாக்கல் ஆகிய அனைத்தும் அடங்கியுள்ள தேசியக் கல்விக் கொள்கையின் இன்றியமையாத மூலக் கூறுமாகும். புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள ஒன்றிய அரசாங்கம் இந்த ஊழல்கள் குறித்து மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ) விசாரிக்க வேண்டும் என்று அதற்குக் கட்டளையிட்டிருப்பது, ‘வியாபம்’ ஊழலை மூடி மறைத்ததைப்போல இதனையும் மூடிமறைப்பதற்கான அணுகுமுறையே என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. இவை உயர்கல்வியின் கொள்கைகளில் ஒன்றிய அரசாங்கம் முற்றிலுமாக சரிவை சந்தித்திருக்கிறது என்பதன் பிரதிபலிப்பேயாகும். இதற்கு இந்த அரசாங்கம் முழுமையாக, குறிப்பாக ஒன்றிய மனிதவள வளர்த்துறை அமைச்சர், பொறுப்பேற்க வேண்டும். அவர் ராஜினாமா செய்திட வேண்டும்.
மிகவும் பெரிய அளவிலும் பன்மைத்தன்மைகள் நிறைந்தும் உள்ள இந்தியா போன்ற ஒரு நாட்டில் உயர்கல்வித்துறையை மத்தியத்துவப்படுத்தியிருப்பதை மீண்டும் மாற்றியமைத்திட வேண்டும். இதன் முதல்கட்டமாக மத்தியத்துவப்படுத்தப்பட்டுள்ள ‘நீட்’ தேர்வுகளை கிழித்தெறிய வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற தொழிற்கல்வி (professional) நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையை முறைப்படுத்துவதற்கு தனித்தனி முறைகளை அனுமதித்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.