india

img

அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்குப் பதிலடி கொடுத்திட வேண்டும் சிபிஎம் வலியுறுத்தல்

ஒன்றிய பாஜக அரசு, அமெரிக்கா விடுத்துள்ள மிரட்டல்களுக்கு அஞ்சிடாமல் பதிலடி கொடுத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக, கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அமெரிக்கா, ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதித்திருப்பதால், இந்தியா மாஸ்கோவுடன் எரிசக்தி ஒப்பந்தத்தைத் தொடர்ந்தால் “கடும் விளைவுகள்”
ஏற்படும் என்று அமெரிக்காவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மூலமாக அமெரிக்கா மிரட்டியிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. சர்வதேசப் பண பரிவர்த்தனையில் அமெரிக்க டாலரை ஓரங்கட்டிவிட்டு, ரூபாய்-ரூபிள்கள் மார்க்கத்தை மேற்கொள்வதிலிருந்து இந்தியா தன்னை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று அது சுட்டிக்காட்டியிருக்கிறது.  
மோடி அரசாங்கம், இப்போதாவது அமெரிக்காவுடன் ‘குவாட்’(QUAD) போன்ற நான்கு நாடுகளின் போர்த்தந்திர ராணுவக் கூட்டணியில் இணைந்திருப்பதன் ஆபத்துகளை உணர்ந்துகொள்ள வேண்டும். இந்தியா அவ்வாறு அந்தக் கூட்டணியில் சேர்ந்திருப்பதன் காரணமாகத்தான் இப்போது அமெரிக்கா, இந்தியா மீது இத்தகைய மிரட்டல்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஒன்றிய அரசு, நாட்டின் நலன்களை உயர்த்திப்பிடித்திட வேண்டும். இத்தகைய அமெரிக்காவின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிந்திடக்கூடாது. 
இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.