பீகாரில் பாலம் காணாமல் போன விவகாரத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பீகார் மாநிலம் ரோக்தாஸ் மாவட்டம் ஆமியாவார் கிராமத்தில் 50 ஆண்டு பழமையான 60 அடி நீள இரும்பு பாலம் ஒன்று இருந்தது. சில நாட்களுக்கு முன்பு அந்த பாலத்தை சிலர் ஜே.சி.பி , கியாஸ் கட்டர் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி வெட்டி எடுத்து சென்று விட்டனர். திடீரென பாலம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்த கிராமமக்கள் இது பற்றி போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் அதிகாரிகள் என சொல்லி ஒரு கும்பல் இந்த நூதன கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. அந்தகும்பலை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் திருட்டில் ஈடுபட்ட நீர்பாசனத்துறை அதிகாரி அரவிந்தகுமார், துணை வட்ட அதிகாரி ராதேஷியாம்சிங் ஆகிய 2 அதிகாரிகள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் அவர்களிடம் இருந்து ஜே.சி.பி எந்திரம், கார், கியாஸ் கட்டர்கள், திருட்டு போன இரும்பு தளவாடங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.