india

img

உச்சநீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்க உத்தரவிடுக.... உச்சநீதிமன்றத்தில் சிபிஎம் எம்.பி., மனு தாக்கல்....

புதுதில்லி:
இஸ்ரேலிய பெகாசஸ் வேவுமென்பொருள் மூலம் இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்க ளை உளவுபார்த்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்புவிசாரணைக்குழு அமைக்க உத்தர விடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. மனு தாக்கல் செய்துள்ளார்.

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனம் பெகாசஸ் வேவு மென்பொருள் மூலம் இந்தியாவில் உள்ள பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், ஒன்றிய அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோரின் செல்போன் பேச்சுக்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக  பிரான்ஸைச் சேர்ந்த ஃபர்பிடன் ஸ்டோரிஸ் மற்றும்சர்வதேச பொதுமன்னிப்பு ஸ்தாபனம் ஆகியவை இணைந்து புலனாய்வு செய்து கண்டுபிடித்ததை சர்வதேச அளவில் தி  நியூயார்க் டைம்ஸ், கார்டியன்,  லீ மாண்டே ஆகியபத்திரிகைகள்  வெளியிட்டுள்ளன. 

இந்தியாவையே உலுக்கியுள்ள இந்த பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழுஅமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று  நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மோடி அரசோ முறையான பதில் அளிக்காமல் இருஅவைகளையும் ஒத்திவைத்துக் கொண்டு, பதிலளிப்பதிலிருந்து தப்பித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. பெகாசஸ் விவகாரத்தில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி பதில்  சொல்லியேயாக வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல்தலைமைக்குழு வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் உச்சநீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.ஜான் பிரிட்டாஸ்  எம்.பி. தாக்கல்செய்த மனுவில் கூறியிருப்பதாவது: பெகாசஸ் வேவு மென்பொருள் அதிகாரபூர்வமற்ற முறையில் பயன்படுத்தப்பட்டு இருந்தால் அது அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய பிரிவு 19(1)(ஏ) அடிப்படை உரிமையான அந்தரங்க உரிமைக்கு எதிரானதாகும். புட்டாசாமி வழக்கில் அந்தரங்க உரிமையை இந்த நீதிமன்றம் வலியுறுத்திய நிலையி்ல் இது அந்த தீர்ப்பின் முகத்தில் அறைந்தது போன்றதாகும்.

தகவல்தொழில்நுட்பச் சட்டம், இந்திய தொலைத்தொடர்புச் சட்டம்ஆகியவற்றை மீறியதாகும். ஆதலால், இந்த விவகாரத்தில் உடனடியாக, சுயேச்சையான, வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.இந்த விவகாரத்தில் தீவிரமான குற்றச்சாட்டு எழுந்தபோதிலும்கூட ஒன்றிய  அரசு அதைப்பற்றிக் கவலைப்படாமல் விசாரணைக்கு உத்தர விடாமல் இருக்கிறது. ஒன்றிய அமைச்சர் வைஷ்ணவ், பெகாசஸ் வேவு மென்பொருள் மூலம் உளவுபார்க்கப்பட்டது என்று ஒப்புக்கொள்ளவும் இல்லை, அதை மறுக்கவும் இல்லை.ஒன்றிய அமைச்சரின் கருத்து தவிர்க்கக்கூடியதாக இல்லை. உளவுச் செயலியை வடிவமைத்த இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்தை சந்தேகத்திற்கிடமின்றி ஒன்றிய அரசு ஒப்புக்கொள்கிறது.

எனவே, தனது சொந்த அமைச்சரவை சகாக்கள், அரசு அதிகாரிகள், அரசியலமைப்புச் சட்டப் பதவியில் இருப்போர், தேர்தல் ஆணையர்கள், நீதிபதிகள், சிபிஐ அதிகாரிகள், உச்சநீதிமன்ற ஊழியர்கள், சமூகஆர்வலர்கள், அறிவியல் வல்லுநர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோரின் செல்போன்களை இடைமறித்து கேட்டதற்கான காரணத்தை விளக்குவது அவசியம்.பெகாசஸ் வேவு மென்பொருள் இந்திய அரசால் பயன்படுத்தப் பட்டிருக்க வேண்டும் அல்லது வெளிநாட்டு ஏஜென்சியால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். ஒருவேளை இந்தியஅரசால் பெகாசஸ் உளவு மென்பொருள் பயன்படுத்தப்பட்டால் அது அதிகாரபூர்வமற்ற முறையில் செய்யப்பட்டுள்ளது.

அந்த மென்பொருளுக்காகச் செலவிடப்பட்ட தொகை அரசியல், தனிப்பட்ட நலனுக்காக ஆளும்கட்சி செய்ததை ஏற்க முடியாது. அல்லதுவெளிநாட்டு ஏஜென்சி கண்காணித்திருந்தால், வெளிநாட்டு சக்திகள் இந்தியாவுக்குள் ஊடுருவிய அத்துமீறலாகும். இதை தீவிரமாகக் கையாள வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.  வழக்கறிஞர் எம்.எல். சர்மா என்பவரும் இதுபோன்றதொரு மனுவை தாக்கல் செய்துள்ளார். 

;