india

img

50 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.... மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்...

புதுதில்லி:
இந்தியாவில் இதுவரை 50 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா  தடுப்பூசி போடப்பட்டுள் ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்  தகவல் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் நடந்து வரும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்துமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் , ஒவ்வொரு நாளும் தடுப்பூசி போடப்படும் நபர்களின் எண்ணிக்கையில் உள்ள மாறுபாட்டை ஆய்வு செய்து, அவற்றை அதிகரிக்குமாறு மாநில சுகாதார செயலாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கோவின் டிஜிட்டல் தளத்தில் பதிவு செய்துள்ளவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்யுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளன.சாத்தியமாகும் இடங்களில் ஒரே நேரத்தில் தடுப்பூசி அமர்வுகளை ஏற்படுத்துமாறும் இந்த இலக்கை எட்டுவதற்கு சிறப்பு மூலோபாயங்களை பயன்படுத்துமாறும் மாநிலம், மாவட்டம் மற்றும் வட்டார அளவில் அடிக்கடி கூட்டங்கள் நடத்தி சவால்களை ஆய்வு செய்யவும், கள நிலவரங்களை உணர்ந்து கொள்ளவும், பிரச்சனைகளை தீர்க்கவும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் பிப்ரவரி 20 ஆம் தேதிக்கு முன் ஒருமுறையாவது தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய வேண்டும். இதைப்போல அனைத்து முன்கள வீரர்களுக்கும் மார்ச் 6 ஆம் தேதிக்கு முன் ஒருமுறையாவது தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                        *******************

மேலும் 7 கொரோனா தடுப்பூசிகள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

கொரோனா வைரசு தொற்றுக்கு எதிராக மேலும் 7 தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் இந்திய விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் தடுப்பூசி போடுவதற்காக மேம்படுத்தப்பட்டு வருகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு எதிராக பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர் இணைந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவேக்ஸின் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்ரஜென்கா, சீரம் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் தற்போது நாட்டில் முன்களப்பணியாளர்கள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது.இதுகுறித்து அமைச்சர் ஹர்ஷவர்தன் கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் கூறுகையில், அண்மையில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள தடுப்பூசிகளை மட்டுமே இந்தியா சார்ந்திருக்கப்போவது இல்லை. நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்பதற்காக மேலும் 7 தடுப்பூசிகளைக் கண்டுபிடிக்கும் பணியில் இந்திய விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

வெளிச்சந்தையில் விற்பனை செய்தால் சூழலை கட்டுப்படுத்த முடியாத நிலை கூட உருவாகலாம். ஆகையால் எதிர்காலத்தில் சூழலுக்கு ஏற்பவும் தேவைக்கு ஏற்பவும் முடிவுகளை அரசு எடுக்கும். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மார்ச் மாதத்திலிருந்து தொடங்கும். இந்த 7 தடுப்பூசிகளில் 3 தடுப்பூசிகள் பரிசோதனை நிலையில் உள்ளன. 2 தடுப்பூசிகள் கிளினிக்கல் பரிசோதனைக்கு முந்தையக் கட்டத்திலும், ஒரு தடுப்பூசி முதல் கட்ட கிளினிக்கல் பரிசோதனையிலும், இரண்டாவது  தடுப்பூசி 2-வது கட்டத்திலும் உள்ளன.நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கிடைப்பதற்கு வகை செய்யும் அளவில் தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.
 

;