india

img

பிரதமருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு.... கூடுதல் தடுப்பூசி, ஜிஎஸ்டி பாக்கியை வழங்க வலியுறுத்தல்... அனைத்து நுழைவுத்தேர்வுகள் - வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரிக்கை....

புதுதில்லி:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூன் 17 வியாழனன்று பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். 

தமிழக முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக ஜூன் 17 வியாழனன்று தில்லி வந்தார்.  வியாழனன்று  மாலை 5 மணிக்கு பிரதமர் மோடியை, அவரதுஇல்லத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நீடித்தது. தமிழ்நாட்டின் நலன் சார்ந்த 30-க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். கூடுதல் கொரோனா தடுப்பூசி, ஜிஎஸ்டி பாக்கித்தொகையை வழங்க வேண்டும் என்றும் அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பிரதமருடனான சந்திப்புக்குப் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தமிழ்நாடு இல்லத்திற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போதுஅவர் கூறியதாவது:பிரதமருடனான சந்திப்பு மனநிறைவு அளிக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான நிதி வழங்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்துள் ளார். பிரதமரிடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள் ளோம். எந்த நேரத்திலும் தன்னோடு தொடர்பு கொள்ளலாம் என்றும் கோரிக்கையை வைக்கலாம் என்றும் வெளிப்படையாக பிரதமர் உறுதி அளித்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கு கூடுதலாக தடுப்பூசி வழங்க வேண்டும். செங்கல்பட்டு மற்றும் ஊட்டியில் உள்ள தடுப்பூசி உற்பத்தி தொழிற்சாலைகளை விரைவாக செயல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டிற்கு தேவையான நிதிஆதாரங்களை முழுமையாக வழங்க வேண்டும். ஜி.எஸ்.டிபாக்கித்தொகையை முழுமையாக அளிக்க வேண்டும். நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.மேகதாது அணைக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும். முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை152 அடியாக உயர்த்தவேண்டும்.

கோதாவரி - காவிரி, காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்.இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் பாதிப்புக்குஉள்ளாகும் விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண வேண்டும். கச்சத்தீவை மீட்க வேண்டும். புதியமின்சார சட்டம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவாக அமைக்க வேண்டும். கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். மருத்துவக் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு தரப்படவேண்டும். ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படவேண்டும். அறிவிக்கப்பட்ட பாது காப்புத்துறை தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும். புதிய கல்விக்கொள்கையை திரும்பப்பெற வேண்டும். நாடு முழுவதும் இலவச கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும். கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க வேண்டும். சென்னை மெட்ரோ இரண்டாம் திட்டத்தை தொடங்கிட வேண்டும். இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழ்நாட்டில் வாழும் மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ் அறிவிக்கப்பட வேண்டும். செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் சீரமைக்கப்பட வேண்டும்.

உலகப் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்கப்பட வேண்டும். இட ஒதுக்கீடு எனப்படும் சமூக நீதி அளவுகோலைமாநிலங்களே நிர்ணயித்துக் கொள்ள உரிமை அளிக்கவேண்டும். சேது சமுத்திர திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். பல்வேறு நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் மேம்பாட்டுத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். ரயில்வே திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். குடியுரிமைச்சட்டங்கள், மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட வேண்டும்.  என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள் ளோம்.இவ்வாறு முதல்வர் தெரிவித் தார்.பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், “தமிழக மக்களின் நலன்களைப் பாதுகாக்கவும் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தும் ஒன்றிய அரசிடம் தொடர்ந்து உரிய அழுத்தம் கொடுப்போம்.

ஒன்றியஅரசுடனான மாநில அரசின் உறவுஎன்பது “உறவுக்கு கை  கொடுப்போம்” “உரிமைக்கு குரல் கொடுப்போம்” என்பதாக அமைந்திருக்கும் என்றார்.இதனைத் தொடர்ந்து, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரையும் சந்திக்கிறார். வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்திக்கிறார்.

;